சிறப்புக் கட்டுரைகள்

தவறவிடக் கூடாத புத்தகங்கள்: சந்தி பிரிக்கப்பட்ட பாரதி

செய்திப்பிரிவு

பதிப்பாசிரியர்: பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட பாரதி கவிதையில் அவர் என்ன நவீனமான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் இன்றைய நவீன வாசகனுக்குப் பொருள் தெரியாத சொற்கள் அதிகமாக இருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்கள், தமிழாகிய சம்ஸ்கிருதச் சொற்கள், சித்தாந்த சொற்கள், சென்ற நூற்றாண்டில் மிகுதியும் பயன்படுத்தி, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள் என அவை பலவாறு அமையும்.

பழந்தமிழ் சொற்களில் சில அல், எல், அளி, முரல், வாலை, நால்வாய், தூத்திரை என்பன சில சான்றுகள். தமிழாகிய சம்ஸ்கிருத சொற்களில் சில கன்னன் (கர்ணன்), வன்னக் களஞ்சியம் (வர்ணக்களஞ்சியம்) போன்றன. தொடக்க காலத்தில் கர்ணனை, தமிழாக்கி கன்னன் என்றெழுதிய பாரதி பின்னால் பாஞ்சாலி சபதத்தில் கர்ணன் என்றே குறிப்பிடுகிறார் (150). சித்தாந்த சொற்கள் அத்துவாக்கள், கரணம், கைதவம் முதலியன. சென்ற நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்பட்டு, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள். அவையாவன: நவை, நசை, மிசை, நிருதர், கரிசகல், நொய்ம்பு, மொய்ம்பு.

நூறாண்டு கடந்த பின்னரே பாரதிக்குப் பொருள் எழுத வேண்டியிருக்கிறது என்று எண்ண வேண்டியதில்லை. பாரதியே பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்துக்குப் பொருள் விளக்கமும் குறிப்புகளும் எழுதி வைத்துள்ளார். அக்குறிப்புகள், இப்பதிப்பில் அவ்வவ் இடத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஓரிரண்டு.

மலர் விழிக் காந்தங்கள் காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில் செய்து கொண்டிருக்கும் (மாதர்) விழிகள். உரியோர் பந்துக்கள் (பந்துகளுக்கு உறவினர் என்று பொருள் கொடுக்க வேண்டியது இன்றைய நிலைமை), கதலி ஒருவகை மான்.

இந்தப் பதிப்பு யாருக்கு?

பாரதி கவிதைகளை இக்காலத் தலைமுறையினரும் வெகு சரளமாக படிக்க இப்பதிப்பு வசதி செய்துள்ளது. சந்தியின் இருப்பால் சரளமாகப் படிக்க இயலாதவர்கள் இனி வேகமாகப் படித்துச் செல்ல முடியும். பாரதியின் தமிழைப் பொருள் புரிந்து நுணுக்கமாகப் படிக்க இப்பதிப்பு உதவி புரியும். பாரதி ஆய்வில் ஈடுபடுவர்களுக்கும் பாரதியை மொழி பெயர்ப்பவர்களுக்கும் இப்பதிப்பு உதவும்.

என் மகள் ஆழி அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் காலை நான் படித்துக்கொண்டிருந்த பாரதி பாடலைப் பக்கத்தில் வந்து நின்ற அவளை எதேச்சையாய் வாசிக்கச் சொன்னேன். அவளால் வாசிக்க முடியவில்லை. அவள் வாசிக்குமாறு பாரதியை எழுதித் தருவதாக அப்போது உறுதி அளித்தேன். பள்ளி இறுதிக்குள்ளாவது முடித்துத் தருவதாகச் சொன்ன நான் அவளது மூன்றாண்டுக் கல்லூரி கல்வி நிறைவுறும் சமயம் வாயில் நுரை தள்ள அப்பணியை முடித்து அவள் கையில் தருகிறேன். இனி அவள் தடுமாறாமல் படிக்கக்கூடும் ஆயிரமாயிரம் இளைய தமிழ்த் தலைமுறையுடன் இணைந்து.

ரூ. 750 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 490-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.

தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001

தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com

SCROLL FOR NEXT