சிறப்புக் கட்டுரைகள்

ம.பொ.சி.யும் மேலவையும்!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

இந்தியாவில் பூரண சுதந்திரம் மலர்ந்தது 1947 ஆகஸ்ட் 15 என்றாலும், அதற்கு முன்னோடியாக மாநிலங்களில் அரைகுறையாகவேனும் சுயாட்சி மலர்ந்தது 1920-ல். ‘மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டம்’ எனும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வழங்கிய அரசியல் சீர்திருத்தத்தின் விளைவாக அப்போதைய சென்னை, பம்பாய், கல்கத்தா மாநிலங்களில் சட்ட மன்றத்தோடு கூடிய சுயாட்சி மலர்ந்தது.

அப்போதுதான், தமிழ் - தெலுங்கு – கன்னடம் - மலையாளம் ஆகிய நான்கு மொழிப் பிரதேசங்களைக் கொண்ட சென்னை ராஜ்ஜியம், தனக்கென சட்ட மன்றத்தையும் அமைச்சரவையையும் பெற்றது. அந்த சட்ட மன்றம் ‘லெஜிஸ்லேடிவ் கவுன்சில்’ என்னும் ஆங்கிலப் பெயரால் அழைக்கப்பட்டது. அதன் பின்னர், ‘1935’ எனும் பெயரில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் வாயிலாக சென்னை - பம்பாய் - வங்காளம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அவைகளை உருவாக்கும் சட்டமானது 1937-ல் நடைமுறைக்கு வந்தது.

பழைய லெஜிஸ்லேடிவ் கவுன்சிலானது, அதே பெயராலேயே ‘மேலவை’யாக நீடித்தது. புதிதாக ‘லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி’ எனும் பெயரில் ‘கீழ் அவை’ ஒன்றும் பிறந்தது.

ஆனால், தமிழக சட்ட மன்றம் 15.05.86-ல் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, நாடாளு மன்றத்தில் சட்டமியற்றப்பட்டு, 31.10.86-ல் தமிழக மேலவை கலைக்கப்பட்டது. 1920 முதல் 1986 வரை அதாவது, தொடர்ந்து 66 ஆண்டு காலம் இயங்கிவந்தது மேலவை. மேலவையில் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்கள்:

இவர்களில் அதிக ஆண்டுகள் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் டாக்டர் பி.வி.செரியன், ம.பொ.சிவஞானம் ஆகிய இருவரும் ஆவர். சுமார் 9 ஆண்டு காலம் தலைவராக இருந்த ம.பொ.சி. அதற்கு முன்பாக துணைத் தலைவராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். 1952 முதல் 1954 வரை மேலவையின் உறுப்பினராகவும், துணைக் கொறடாவாகவும் ம.பொ.சி. இருந்தார். ஆக, கலைக்கப்பட்ட மேலவையுடன்

ம.பொ.சி-க்கு இருந்த தொடர்பு 17 ஆண்டுகள்.

(ஜூன் - 26, சிலம்புச் செல்வர் ம.பொ.சி-யின் 111-வது பிறந்தநாள்)

SCROLL FOR NEXT