சிறப்புக் கட்டுரைகள்

5 கேள்விகள் பதில்கள்: எழுதாமல் என்னால் இருக்க முடியாது: சரவணன் சந்திரன்

ஆசை

பத்திரிகை, இணையம், தொலைக் காட்சி என்று பல ஊடகங் களிலும் பணிபுரிந்திருப்பவர் சரவணன் சந்திரன். அவருடைய முதல் நாவல் ‘ஐந்து முதலைகளின் கதை’ 2015-ல் வெளியானது. அடுத்த ஓராண்டுக்குள் மேலும் மூன்று நூல்கள். அவருடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி.

எழுதவந்த ஒரு ஆண்டில் மூன்று புத்தகங்கள்! எப்படி உணர்கிறீர்கள்?

பல் விளக்கக்கூட மறந்துவிடுவேனே தவிர, பத்து வாக்கியங்கள் எழுதாமல் என்னால் இருக்கவே முடியாது. ஆனால், ஐந்து வருடங்கள் எதுவும் எழுதாமல், பொருளீட்டும் முனைப்பில் இருந்தேன். நாங்கள் விளையாட்டில் இருந்த காலத்தில் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னால் வரை ஹாக்கி மட்டையைக் கையில் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி நடக்கும் தினத்தன்று மட்டையைக் கையில் பிடித்தால், மைதானத்தில் புரவி மாதிரி துள்ளுவோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்துக்குத் திரும்பியிருப்பதால், அடுத்தடுத்த கோல்களைப் போடும் முனைப்பில் இருக்கிறேன்.

இந்தப் படைப்புகளின் பின்னுள்ள உந்துசக்தி எது?

கட்டாயம் விளையாட்டு தான். சாகிற வரை ஒரு விளை யாட்டு வீரன் அவனுடைய உத் வேகத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டான். என்னுடைய கோச் குமார் ‘குட் ஷாட் பட் நோ யூஸ்’ என்று அடிக்கடி சொல்வார். ஆகவே, எல்லா பந்துகளையும் கோலாக்க முயலும் ஒரு வீரன்தான் என்னை உந்தித் தள்ளுகிறான்.

ஊடக அனுபவம் உங்கள் படைப்புகளில் ஏற்படுத்திய விளைவுகள் என்னென்ன?

அத்தனை கச்சாப் பொருட்களையும் எனக்குக் கொடுத்தது ஊடகம். கச்சிதமாக மொழியைப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்தது பத்திரிகை. வார்த்தைகளின் வலிமையை நான் உணர்ந்திருக்கிறேன். ஆகவே, பயனில்லாத ஒரு வார்த்தையைக்கூட எழுதுவதில்லை. எனினும், இலக்கிய தளத்தில் பத்திரிகையாளர் என்றாலே குறைத்து மதிப்பிடும் போக்கு இருப்பதைப் பாதகமானதாகக் கருதுகிறேன். ஊடகங்கள் தயாரித்த ஒரு நல்ல ‘புராடெக்ட்’ என்றே பெயரெடுக்க விரும்புகிறேன்.

ஊடகங்களிலிருந்து இப் போது மீன் வியாபாரம்..?

தோற்றுப்போன வணிகக் குடும்பத்தி லிருந்து முன் னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறைப் போராட்டம். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலை முறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் எழுத்துப் பிரதிநிதி. சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. மீன்களோடு நானும் மீனாகி விட்டேன். மீனின் இயல்பு எதுவோ அதுவாகப் போகிறது வாழ்க்கை.

அடுத்தடுத்த திட்டங்கள், அடுத்தடுத்த படைப்புகள்?

வணிகத்தில் கவனம் செலுத்துவது. படிப்பது. பயணிப்பது. 90-களில் தென் தமிழகத்தில் நடந்த சாதிக் கலவரத்தில் இளம் மெளன சாட்சிகளாக இருந்த வாழ்க்கையை, நவீன விளையாட்டுப் பின்னணியில் வைத்து ஒரு காதல் கதை எழுதத் திட்டம். அந்த நாவலின் தலைப்பு: அண்ணா ஸ்டேடியம்.

          
SCROLL FOR NEXT