கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ‘அடலசன்ஸ்’ (Adolescence) என்கிற பிரிட்டிஷ் ஒடிடி குறுந்தொடர் பரவலான கவனத்தை ஈர்த்தது. 13 வயதான ஜேமி என்கிற சிறுவன், தனது வகுப்புத் தோழியைக் கொலை செய்துவிடும் கதையை இத்தொடர் விவரிக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்லாமல் உலகளவில் நிகழும் சிறார்களின் குற்றச்செயல்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்திய தொடர் இது.
வன்முறைக் குற்றத்தில் சிறார் ஈடுபடுவதற்கான சிக்கலான உளவியல் - சமூகக் காரணங்களை இத்தொடர் ஆராய முற்பட்டதை ஆய்வாளர்கள் பலரும் வரவேற்றனர். காரணம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகச் சிறார்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. இந்தக் குற்றச்செயல்களில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் ஆகியவையும் அடங்கும்.
உலகளவில்... 2016 - 2022 காலக்கட்டத்தில் பிரிட்டனில் குற்றச்செயல்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட சிறாரின் எண்ணிக்கை 50.56%இலிருந்து 57.27%ஆக அதிகரித்துள்ளது. அதே கால இடைவெளியில் அமெரிக்காவில் 27.8 % - 32.6% ஆகவும், கனடாவில், 32.57% - 42.38% ஆகவும், இந்தியாவில் 32.57% - 44.92% ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்திய மக்கள்தொகையில் சுமார் 33% சிறார் (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) உள்ளனர்.
இதில் 6-7% பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஈடுபட்டோரில் 80% பேர் சிறுவர்கள், 20% பேர் சிறுமிகள் எனவும் தெரியவந்தது. குறிப்பாக, போதைப் பொருள் பயன்பாடு காரணமாகத் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் குற்றச்செயல்களில் சிறார் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
இந்தியாவில்: இந்தியாவில் 2016-2022 காலக்கட்டத்தில் குற்றச்செயல்களுக்காகக் கைது செய்யப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2016இல், வன்முறைக் குற்றச்செயல்களுக்காகக் கைது செய்யப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 32.5%. 2022இல் இந்த எண்ணிக்கை 49.5% ஆக அதிகரித்துள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவின்படி, 2017 - 2022 காலக்கட்டத்தில், இந்தியாவில் பதின்பருவத்தினரால் நடந்த வன்முறைக் குற்றங்களில் 20% மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்தவை. அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம் (18%), ராஜஸ்தான் (9.6%), சத்தீஸ்கர் (8.4%), டெல்லி (6.8%), தமிழ்நாடு (5.85%) ஆகியவை உள்ளன. டெல்லி பரப்பளவில் சிறிய பகுதியாக இருந்தாலும், அங்கு நடைபெறும் குற்றச் செயல்கள் முறையாகப் பதிவுசெய்யப்படுவதால் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில்... தமிழ்நாட்டில் சிறார் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளன. 2021இல் பதிவான வழக்குகளுடன் (2,212) ஒப்பிடும்போது, 2022இல் கூடுதல் எண்ணிக்கையில் (2,607) வழக்குகள் பதிவாகியுள்ளன; தமிழகத்தில், 16.4% இளம் வயதினர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். சிறார் குற்றங்களில், தென்னிந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் தமிழகத்தில் கீழ்க்கண்ட குற்றப்பிரிவுகளின்கீழ் சிறார்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவற்றின் விவரம்: திருட்டு - 548 வழக்குகள், தாக்குதல் - 425 வழக்குகள், வேகமாக வாகனம் ஓட்டுதல் - 208 வழக்குகள், கொலை - 102 வழக்குகள், கொலை முயற்சி - 101 வழக்குகள். பெருநகரங்களை எடுத்துக்கொண்டால், 2022இல் டெல்லிக்கு அடுத்தபடியாக, சென்னையில் அதிகபட்சமாகச் சிறார் குற்றங்கள் பதிவாகியுள்ளன. சென்னையில் 2021இல் பதிவான குற்றச் சம்பவங்கள் 496. இந்த எண்ணிக்கை 2022இல் 521ஆக அதிகரித்துள்ளது.
காரணங்கள்: பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையே ஏற்படும் இடைவெளி, குடும்பப் பிரச்சினைகள், போதை - மது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வியிலிருந்து இடைநிற்றல், வறுமை, இணையதளங்களின் தாக்கம், வன்முறையைக் கொண்டாடும் மனநிலை போன்றவை சிறார் குற்றச்செயல்களில் ஈடுபட முக்கியக் காரணங்களாக அமைவதாக உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பொருட்டே பதின்பருவச் சிறார்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாற்றத்துக்கு உள்ளான சட்டங்கள்: ஐ.நா. அவை 1959இல் குழந்தைகளுக்கான உரிமைகள் பிரகடனத்தைக் கொண்டுவந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கையெழுத்திட்டன. இச்சட்டத்தின்படி, சிறார்கள் குற்றம் இழைத்திருந்தாலும், அவர்களைச் சிறையில் அடைக்க முடியாது. மாறாக, அவர்களுக்குப் பாதுகாப்பு, பராமரிப்பு, பயிற்சி, கல்வி, மறுவாழ்வு ஆகியவற்றை வழங்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.
டெல்லி நிர்பயா கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கடும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில், சிறாருக்கான நீதிச் சட்டம் இந்தியாவில் மாற்றத்துக்கு உள்ளானது. சிறார் நீதிச் சட்டம் (குழந்தை பராமரிப்பு - பாதுகாப்புச் சட்டம்) 2015இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர் 18 வயதை நிறைவு செய்தவர் எனக் கருதி, அவரை விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கிறது. சிறார் நீதி வாரியம் குற்றம் சாட்டப்பட்டவரை ஆய்வு செய்து இதுகுறித்து முடிவெடுக்கும்.
மேலும், சிறார் நீதிச் சட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறாருக்கு, நல்லொழுக்கங்களைக் கற்பித்து, உளவியல்ரீதியாக ஆரோக்கியமான மாற்றத்தைத் தரும் நோக்கத்துக்காகவே கூர்நோக்கு இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கூர்நோக்கு இல்லங்களில் இருந்து விடுதலையாகும் சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்களில் கைது செய்யப்படும் அவலநிலை தொடர்வதாகவும், சில சிறார்கள் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து தப்பிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்வதாகவும் சமூகச் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதின்பருவத்தை எதிர்கொள்ளல்: குழந்தை வளர்ப்பில் பதின்பருவம் சிக்கலான ஒரு காலக்கட்டம் என்பதால், குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் உன்னிப்பாகக் கண்காணிப்பது அவசியம். குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பெற்றோர் முயல வேண்டும். சிறார்களுக்கு விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் நண்பர்கள், சமூகம் மூலம் அளிக்கப்படும் இணைநிலையினரின் அழுத்தத்தை (Peer Pressure) எதிர்கொள்ளும் மனநிலையை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்.
பள்ளிகள் மனநல ஆலோசகர்களை நியமித்துப் பதின்பருவக் காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பதற்றத்தைக் கையாள உதவலாம். சிறார் நீதிச் சட்டத்தைத் திறம்பட அமல்படுத்துவது, கூர்நோக்கு இல்லங்களில் மறுவாழ்வுத் திட்டங்களை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்.