சிறப்புக் கட்டுரைகள்

நகரமயமாக்கலின் சவால்கள் | சொல்... பொருள்... தெளிவு

இந்து குணசேகர்

உலக மக்கள்தொகையில் 57.8% பேர் நகரப் பகுதியில் வசிப்பதாகவும் இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்றும் ‘யூத் கிளைமேட் சேஞ்ச்மேக்கர்ஸ்’ (Youth Climate Changemakers) அமைப்பு கணித்துள்ளது. இந்த நிலையில், நகரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் பல்வேறு சவால்கள் உருவாகிவருகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால் வாழ்வதற்கான தகுதியைப் பெரும்பாலான நகரப் பகுதிகள் இழக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் நகரமயமாக்கல்: காலநிலை மாற்றத்​தினால் நகரங்கள் முன்னெப்​போதும் இல்லாத கடுமையான சவால்களை எதிர்​கொண்​டுள்ளன என ஐக்கிய நாடுகள் அவை சுட்டிக்​காட்​டி​யுள்ளது. உலகின் தெற்கு நாடுகளில் நகரமய​மாக்கல் தீவிர​மாகிவரு​கிறது. அதேநேரத்​தில், அந்நாடு​களில் போதிய உள்கட்​டமைப்பு வசதிகள் இல்லாத​தா​லும், வளங்கள் பற்றாக்​குறை​யி​னாலும் அங்குள்ள நகரங்கள் நெருக்​கடிகளைக் கடுமையாக எதிர்​கொண்டு வருகின்றன. குறிப்பாக, நகரங்​களில் நிலவும் இடப்பற்​றாக்குறை முக்கியப் பிரச்​சினையாக மாறியுள்ளது.

காலநிலை மாற்ற விளைவினால் தீவிர மழை, பெருவெள்ளம், வெப்ப அலை போன்ற​வற்றால் மக்கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். வரும் ஆண்டு​களில் இந்தியா, சீனா, நைஜீரியா போன்ற நாடுகளின் நகரங்​களில் மக்கள்தொகை அதிகரிக்கும் எனத் தரவுகள் குறிப்​பிடு​வ​தால், அதை எதிர்​கொள்​வதற்கான திட்டங்கள் அவசிய​மாகின்றன.

இந்திய நகரமயமாக்கல்: இந்திய நகரமய​மாக்கல் பாதையானது, வட பகுதி நாடுகளின் நகரமய​மாக்​கலிலிருந்து முற்றி​லுமாக வேறுபட்டது. மேற்கத்திய நாடுகளில் தொழில் புரட்​சியைத் தொடர்ந்து நகரமய​மாக்கல் ஏற்பட்டது. அப்போது கிராமப்புறத் தொழிலா​ளர்​களின் உழைப்பை உறிஞ்சும் வகையிலான வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின.

காலனித்துவ நாடுகளி​லிருந்து சுரண்​டப்பட்ட பொருளாதார வளத்தால் மேற்கத்திய நாடுகளின் நகரமய​மாக்கல் நீடித்தது. காலனித்துவ ஆட்சி​யின்போது பிரிட்​டனின் பொருளா​தா​ரத்​துக்கு இந்தியா 45 டிரில்​லியன் டாலர் பங்களிப்பு செய்ததாக இந்தியப் பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் குறிப்​பிடு​கிறார்.

ஆனால், இந்திய நகரமய​மாக்​கலின் பின்னணியில் பொருளா​தாரப் பிரச்​சினை​களும் இருக்​கின்றன. இதன் விளைவாக, நகரமய​மாக்​கலின் வளர்ச்​சியில் வறுமையும் ஒன்றுசேர்ந்தே பயணித்து வருகின்றன. உதாரணத்​துக்கு, கோவிட் காலத்தில் அறிவிக்​கப்பட்ட பொதுமுடக்​கத்​தி​னால், நகரங்​களில் வேலை இல்லாமல் மீண்டும் கிராமங்களை நோக்கி மக்கள் இடம்பெயரத் தொடங்​கினர். இது இந்தியாவின் நகர்ப்புறத் திட்ட​மிடலில் உள்ள இடைவெளி​களைத் தெளிவாக எடுத்​துக்​காட்​டியது.

தீர்வு கோரும் பிரச்சினைகள்: இந்திய மக்கள்​தொகையில் சுமார் 40% பேர் நகர்ப்பு​றங்​களில் வசிப்பதாக உலக வங்கித் தரவு கூறுகிறது. மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 2001இல் 27.6 சதவீதமாக இருந்தது. இது 2011இல் 31.16 சதவீதமாக உயர்ந்தது.

இந்திய நகரங்கள், நிலையான வளர்ச்சி என்கிற இலக்கை நோக்கி முன்னேறிச் செல்கின்றன; அதேவேளை​யில், வறுமை, வேலையின்மை, சுற்றுச்​சூழல் பாதிப்பு, சமூகப் பிளவுகள், சமத்து​வ​மின்மை போன்ற​வற்​றாலும் அவை பாதிக்​கப்​படு​கின்றன. இந்தியாவில் கட்டிட விதிமுறைகள் முறையாக அமல்படுத்​தப்​ப​டாததால் பெருநகரங்​களில் இடநெருக்​கடியும் அதிகரித்​திருக்​கிறது.

காலாவதியான திட்டங்கள்: இந்திய நகர்ப்புறத் திட்ட​மிடலில் இரண்டு முக்கியப் பிரச்​சினைகள் நீடிக்​கின்றன. முதலாவது, நகரமய​மாக்​கலுக்கான தற்காலிகத் திட்டங்கள் பெருமளவு காலாவ​தி​யாகி​விட்​ட​தால், அதிகரிக்கும் மக்கள்​தொகையை ஈடுசெய்ய அத்திட்​டங்கள் தவறுகின்றன.

1980களில் டெல்லி, சூரத், மும்பை போன்ற நகரங்​களில் தொழில் துறைச் செயல்​பாடுகள் குறைக்​கப்​பட்டன. இது தொழிலா​ளர்​களின் வேலை இழப்புக்கு வழிவகுத்தது. இதனால், வேலை இழந்த தொழிலா​ளர்கள் புறநகர்ப் பகுதி​களுக்கு இடம்பெயர்ந்​தனர். நெரிசல்​மிக்க பகுதி​களில் அவர்கள் குடியேறும் சூழல் ஏற்பட்டது. இந்திய மக்கள்​தொகையில் 41% பேர் குடிசைப் பகுதி​களில் வசித்து​வருவது குறிப்​பிடத்​தக்கது.

அத்துடன் பெரும்​பாலான நகர்ப்புற வேலைகள் 90% அமைப்பு​சாராத் தொழில் சார்ந்​தவையாக இருப்​ப​தால், தொழிலா​ளர்​களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்​கின்​றனர். இரண்டாவது சுற்றுச்​சூழல் பாதிப்பு. அதிகரிக்கும் மக்கள்​தொகை​யினால் நகரங்​களில் குடிநீர், காற்று மாசுபாடு போன்ற சுகாதாரப் பிரச்​சினைகள் ஏற்படு​கின்றன.

2023இல் உலகில் மிக மோசமான காற்று மாசுபாடு நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது எனக் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்யும் ஸ்விட்​சர்​லாந்தின் ‘ஐக்யூஏர்’ அமைப்பு தெரிவிக்​கிறது. மிக மோசமாகக் காற்று மாசு நிலவும் உலகின் முதல் 50 நகரங்​களில் இந்தியாவில் 42 நகரங்கள் இடம்பிடித்​துள்ளது கவனிக்​கத்​தக்கது.

தீர்வுகள்: 2050இல், இந்திய நகரப் பகுதி​களில் 80 கோடி மக்கள் வசிப்​பார்கள் எனத் தரவுகள் கூறுகின்றன. அப்போது காற்று மாசு போன்ற சுகாதார நெருக்​கடிகள் மக்களின் ஆயுள்​காலத்தைக் குறைக்​கக்​கூடும். இதில், காற்று மாசு உருவாவதற்குக் காரணமாக இருக்காத ஏழை மக்களே அதிகம் பாதிக்​கப்​படுவர். இதைக் கட்டுப்​படுத்த ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்கு​வரத்து வசதிகளை அதிகரித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். தீவிர வானிலை நிகழ்வு​களால் ஏற்படும் பெருவெள்​ளத்தை எதிர்​கொள்ள மேம்பட்ட கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்​படுத்​தப்பட வேண்டும்.

நகரங்​களில் இட நெருக்​கடியைத் தவிர்ப்​ப​தற்குக் குடிநீர், சாலை, மின்விளக்கு, போக்கு​வரத்து, வேலைவாய்ப்பு முதலிய அனைத்து அடிப்படை வசதிகளையும் கிராமப்பு​றங்​களில் உருவாக்கு​வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சீர்குலைந்​துள்ள நகரமய​மாக்கல் திட்டங்​களுக்குப் புத்துயிர் அளித்து, வளர்ச்சி சார்ந்து நிரந்தரத் திட்டங்கள் அறிமுகப்​படுத்​தப்பட வேண்டும். மிக முக்கியமாக, திட்ட​மிடப்படாத வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வா​தா​ரத்தைப் பாதிப்​பதுடன், பொருளா​தா​ரத்​தையும் பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT