மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான எஸ். சிவக்குமார், ‘தினமணி கதிர்’ முன்னாள் ஆசிரியர். தேர்ந்த இசை விமர்சகர். எல்லாவற்றுக்கும் மேல் எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பவர். சென்னை புத்தகக் காட்சியில் ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவரை மடக்கினோம். “ஓய்வெல்லாம் வேலைக்குத்தானே, வாசிப்புக்கு ஏது?” என்றவாறே பேசத் தொடங்கினார்.
“சென்னை புத்தகக் காட்சி தொடங்கியதிலிருந்து இன்னைக்கு வரைக்கும் தவறாமல் வந்துக்கிட்டுருக்குற புத்தகப் புழுக்கள்ல நானும் ஒருத்தன். ஒரு நாளைக்கு ஒரு புஸ்தகமாவது முடிக்கணும். இல்லாட்டி தூக்கம் வராது. நான் பழந்தமிழ் இலக்கியம், வரலாறு, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியத்தில் நாட்டம் உள்ளவன். இந்தப் புத்தகக் காட்சியில ஏகப்பட்டது வாங்கியிருக்கேன். அதுல, கோ. தெய்வநாயகத்தின் ‘சிற்ப சாஸ்திரச் செய்தி அடைவு’, ம.தொ. ஸ்ரீநிவாஸ், கோ.பரமசிவம், தி.புஷ்பகலா கைவண்ணத்தில் உருவான ‘திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு 18ம் நூற்றாண்டு ஆவணங்கள்’, மு.கு. ஜகநாதராஜாவின் ‘தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள்’, புலவர் செ. இராசுவின் ‘சேதுபதி செப்பேடுகள்’, டாக்டர் தெ. ஞானசுந்தரத்தின் ‘பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும்’ இதெல்லாம் முக்கியமான புத்தகங்கள்.
“இந்த 37 வருஷத்துல புத்தகக் காட்சி நிறைய வளர்ந்துருக்கு. அதனாலதான் புத்தகக் காட்சியை 20 நாட்கள் வரைக்கும் நடத்தணும்கிறது. ஏன்னா, பல்லாயிரக் கணக்கான புஸ்தகங்கள் மத்தியில, தேடிப் பார்க்க எடுக்க இந்தப் பத்து நாட்கள் போதாது. அப்புறம், முன்னாடிலாம், புத்தகக் கண்காட்சிக்குப் பின்புறம் ‘பார்கைன் கவுன்ட்டர்’ங்கிற பேருல கொஞ்சம் பழைய புஸ்தகங்களை விற்பாங்க. அந்த முறையைத் திரும்பக் கொண்டுவரணும். வசதியில்லாத வாசகர்களுக்கு உதவியா இருக்கும்கிறது என்னோட அபிப்பிராயம்.”