ஆரோக்கியமான வாழ்வுக்கு மருந்துகளையும் மாத்திரைகளையும் தேடுவதை விட, அன்றாட உணவே சிறந்த மருந்து என்பதைத் தனது ‘இரைப்பை நமது பணப்பை அல்ல’ என்ற நூலின் மூலம் டாக்டர் எஸ்.அமுதகுமார் பதிவு செய்துள்ளார்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும், தங்கள் உணவின் தரம் குறித்துப் போதிய விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். அந்தப் பொறுப்பை இந்நூல் செவ்வனே செய்கிறது. நூலில் நிறைந்துள்ள முப்பது கட்டுரைகளும் முப்பது முத்துகள் என்பதில் ஐயமில்லை.
இரைப்பை நமது பணப்பை அல்ல - டாக்டர் எஸ்.அமுதகுமார்
இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications | தொடர்புக்கு: 7401296562
இன்புறத்தக்க கதை நூல் | செம்மை: மாஸ்கோ ராதுகா பதிப்பகத்தார் 80களில் உள்ளம் கொள்ளைகொள்ளும் வடிவமைப்புகளில் புத்தகங்களைத் தயாரித்தனர். தமிழிலும் அங்கிருந்தே தயாரிக்கப்பட்டு நம் கைகளுக்கு வந்து சேர்ந்த காலம் ஒன்றிருந்தது. அதன் ஈரம் மாறாத, அதன் வண்ணம் குலையாத புத்தகமாக ‘ஓவியன் எகோரியின் கதை’யை குலுங்கா நடையான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மத்தியக் கால ரஷ்யாவில் நடைபெறும் கதை இது. ஓர் ஓவியனைப் பற்றிய கதை என்பதால் இந்நூல் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள் நம் கண்ணைப் பறிக்கின்றன. கதைப்போக்கிலும் வடிவமைப்பிலும் காவிய அழகுடன் திகழும் இந்நூலைக் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து வயதினரும் படித்து இன்புறலாம்.
ஓவியன்
எகோரியின் கதை
கியோர்கி யூதின்
குலுங்கா நடையான்
விலை: ரூ.800
காதோடு சில வாசகங்கள் | நயம்: ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குக்கூ காட்டுப்பள்ளி கிராமப்புறக் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டதாகும். இது இயற்கையோடு இயைந்து வாழப் பரிந்துரைக்கிறது. அதன் இன்னொரு அமைப்பான ‘தன்னறம்’ ஓவியங்களுடன் நூல்களை வெளியிடுகிறது.
இந்நூலில் தலாய் லாமாவின் போதனைகள், எழில்மிக்க கோட்டோவியங்களின் பின்னணியில், அவரது உருவங்கள் எளிமையின் சின்னங்களாகத் திகழ்கின்றன. பிற உயிரினங்களுக்கு இன்னல்களை விளைவிக்கும் நாம் அவற்றிடம் ஒருநாள் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டிய தருணம் வரும் என்று கூறும் அவரது வாசகங்கள் நம் காதோடு பேசுவது போலவே இருக்கின்றன.
உள்ளங்களின் உரையாடல்
புனித தலாய்லாமா
தன்னறம் நூல்வெளி
விலை: ரூ.300