தமிழின் மூத்த கவிஞர்களுள் ஒருவரான தேவதேவன் தொய்வில்லாமல் கவிதை எழுதிக்கொண்டிருப்பவர். அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘கண்விழித்தபோது’ நூலிலிருந்து ஒரு கவிதை...
ஒன்றையும் பற்றிக்கொள்ள முடியாமல்
எல்லாவற்றையும் கடந்து போகவிட்டு
பெருந் துக்கமாய் வீற்றிருந்தது
புனல் நடுவே ஒரு பெரிய பாறை.
குளித்துக் கும்மாளமிடும் சிறுவர்கள்
தன்மீது குந்திச் சிரித்துக்கொண்டிருப்பதையும்
தவறவிட முடியுமா?
அங்கிருந்தும் இவ்வாழ்வைச் சொர்க்கமாக்கும்
மெய்மையினைக் கற்றுக்கொண்டு
அன்றிலிருந்து
அதை அசராது உரைத்துக் கொண்டிருக்கிறது
புனல் நடுவே அந்தப் பாறை