தமிழ்ப் பண்பாடு, தமிழர் வாழ்க்கைமுறை குறித்து அலசும் ஓர் ஆவண நூல் ‘1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’. வி. கனகசபை ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழாக்கம் செய்திருக்கிறார். 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் அரசியல் பிரிவுகள், அப்போதைய தமிழகத்தின் நிலவியல் பிரிவுகள், வெளிநாட்டு வணிகம், மூவேந்தர்களின் சிறப்புகள் போன்றவற்றை இந்நூல் விளக்குகிறது.
அத்துடன், தமிழர்களின் பண்டைய சமூக வாழ்வு, சமய வாழ்வு எப்படி இருந்தது என்பதையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. தமிழ்ச் சங்கங்களின் வரலாறும், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்கள் குறித்த பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. வேதாந்தம், ஆசீவகம், நிகண்டவாதம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதி, பவுத்தம் ஆகிய அறுவகை மெய்விளக்கக் கோட்பாடுகளும் பண்டைய தமிழர் வாழ்க்கையில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
வி. கனகசபை
தமிழாக்கம்: பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை - 17.
தொடர்புக்கு: 044- 2433 1510