இலக்கியம்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

செய்திப்பிரிவு

தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான தேவதச்சனுக்கு 2015-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியை இருப்பிடமாகக் கொண்ட தேவதச்சன் 40ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை ஊடகத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். தனது பிரதான ஊடகமாக கவிதையைக் கொண்டிருந்தாலும் இலக்கியம், தத்துவம், அழகியல் சார்ந்த உரையாடல் மையங்களில் ஒருவராக தேவதச்சன் இருக்கிறார். “எஸ்.தமிழ்ச்செல்வன், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், அப்பாஸ், கோணங்கி, சமயவேல், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன் எனப் பலர் அவரது ‘சபையில்’ இருந்து எழுந்தவர்கள். தமிழ்ச்சூழலின் அற்புதங்களில் ஒன்று இந்த எழுச்சி.” என்று விருது அறிவிப்புக் குறிப்பில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

*

பெண்ணியப் பதிப்பகம் அணங்கு

கவிஞர் மாலதி மைத்ரி, பெண்ணியப் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் பெயர் ‘அணங்கு’. மார்க்சிய, தலித்திய, பெரியாரிய, விளிம்புநிலைப் பெண்ணிய எழுத்துகளை வெளியிடும் இடமாக அணங்கு பதிப்பகம் இருக்கும் என்று தனது முகநூல் குறிப்பில் மாலதி மைத்ரி தெரிவித்துளார். தமிழில் பதிப்பக நிறுவனங்களின் குழு அரசியலில் இருந்து விடுபட விழையும் பெண் படைப்பாளிகளுக்குக் களமாக இது இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT