ஹைட்ரோகார்பன் திட்டம் , எட்டு வழிச் சாலை திட்டம், மீத்தேன் திட்டம் என அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தங்கள் நிலங்களின் மீது கார்ப்பரேட்டுகள், அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் போரை மக்கள் வலுவான குரல் எழுப்பி எதிர்த்து வருகின்றன.
அத்தகைய போராட்டங்களின் உள்ள தேவையையும், அதன் பக்கம் உள்ள நியாயங்களையும் வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டு தேனி மாறன் எழுதிய ’நிலத்தின் மீதான போர்’ என்ற புத்தகம்.
’காட் ஒப்பந்தம்’, உலக வர்த்தக கழகம்’ ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு வளர்ச்சி என்ற போர்வையில் இந்திய இயற்கை வளங்கள் மீது எத்தகைய ஆக்கிரமிப்புகள் நடத்தப்பட்டன என்பதை தற்போது பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டுக் கொள்கை திட்டம் உதாரணமாகியுள்ளது என்பதில் தொடங்கி, நிலப் பயன்பாட்டுக் கொள்கை திட்டத்தின் நோக்கம், அதில் உள்ள பிரச்சினைகள், இத்திட்டத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்புத்தகங்களிலிருந்து அலசப்பட்டிருக்கிறது.
மேலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள்தான் பலியாக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியை ஆழமாக எழுப்பியுள்ளதுடன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஏக்கர் நிலங்கள் பயன்பாடில்லாமல் உபரியாகத் தொடர்ந்து இருப்பதன் காரணம் என்ன என்ற கேள்வியையும் ஆசிரியர் எழுப்பி இருக்கிறார்.
விவசாயம் ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கும் சூழலில் அரசு பின்பற்றி வரும் 'கார்ப்பரேட் - அரசியல் பொருளாதார' கொள்கை விவசாயத்தை அழிவுப் பாதைக்குத் தள்ளி விடும் என்ற எச்சரிக்கை மணியை புள்ளி விவரங்களோடு கூறுகிறார்.
முக்கியமாக, சமீபத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய யாராலும் பெரிதும் விமர்சிக்கப்படாத 'தமிழ்நாடு கால் நடைகள் இனவிருத்திச் சட்டம் - 2019', 'வேளாண் விளைபொருட்கள், கால்நடைகள் ஒப்பந்த விவசாயிகள் மற்றும் சேவை சட்டம் 2019' இவ்விரு சட்டத்தில் உள்ள குறைபாடுகள், இந்தச் சட்டங்களால் வறுமை ஒழிக்கப்படுமா? மேலும் கார்ப்பரேட்டுகள் இச்சட்டம் எந்த வகையில் உதவ இருக்கிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கான புதிய கொள்கை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தையும், வளர்ச்சித் திட்டங்கள் - நிலவளம் - விவசாயம் இவற்றை மையப்படுத்தி விவசாயிகளிடம் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை ஏற்பட வேண்டிய தேவையை ஆசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நலனுக்காக இந்திய எழை விவசாயிகளின் நலனைப் புறந்தள்ளி மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்களை எளிமையாக விவரித்துள்ளார் நூலின் ஆசிரியர் . இடையிடையே சமீபத்திய அரசியல் போக்கையும் அங்காங்கே சாடியுள்ளார்.
சென்னை புத்தகத் திருவிழாவில், பூவுலகின் நண்பர்கள் அரங்கில் (492&493) கிடைக்கும்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு:
விலை: ரூ.60
முகவரி:
பூவுலகின் நண்பர்கள்
பழைய எண் 29/2, புதிய எண் 6/2,
12-வது அவென்யூ, வைகை காலனி,
அசோக் நகர், சென்னை -83
தொலைபேசி - 09094990900