திராவிட இயக்கம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நாவல் ஒன்றை எழுதிவருகிறேன். திராவிட இயக்கத்தால் சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. கீழே இருக்கிறவர்கள் மேலே போனார்கள். மேலே இருந்தவர்கள் காணாமல் போனார்கள். மதிப்பீடுகள் சரிந்தன. இன்னொரு பக்கம் அரசியலில் சண்டித்தனம் வந்தது. ஆனால் இந்த மாற்றங்கள் இந்தியா முழுக்க நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக ஏற்றத்தில் இருந்தபோது நடந்தன. இவை எல்லாவற்றையும் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுதிவருகிறேன்.
கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதிய ‘A Southern Music : The Karnatik Story’ என்னும் புத்தகத்தைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். டி.எம். கிருஷ்ணா மற்ற இசைக் கலைஞர்களைக் காட்டிலும் வித்தியாசமானவர். தனித்த கருத்தும் பார்வையும் உள்ளவர். சமூக அக்கறை கொண்டவர். இந்தப் புத்தகத்தில் அவர் கர்னாடக சங்கீதத்தின் பரிமாணத்தை ஒரு வித்தியாசமான முறையில் எழுதியுள்ளார். கிருஷ்ணா இந்தப் புத்தகத்தில் கையாண்டுள்ள பாணியில் இதுவரை இசைப் பரிமாணம் சொல்லப்பட்டதில்லை. அந்த வகையில் இது மிக முக்கியமான புத்தகம்.