இலக்கியம்

ஏ.கே. செட்டியாரின் பயண உலகம்

செய்திப்பிரிவு

ஏ.கே. செட்டியாரின் உலகத்துக்குள் நுழைந்தால், கால இயந்திரத்தில் பறக்கும் அனுபவம் கிட்டும். தான் சென்று வந்த நாடுகள், அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், புகழ்பெற்ற இடங்கள் என்று பல்வேறு விஷயங்களை அலாதியான நடையில் விவரித்துச் செல்லும் எழுத்து அவருடையது. சம்பவங்களை நகைச்சுவை மிளிரும் நடையில் இயல்பாக எழுதுவதுதான் அவரது தனிச்சிறப்பு.

‘உலகம் சுற்றும் தமிழன்’ புத்தகத்தில் 1930-களில் ஜப்பான், கொரியா, ஹவாய் தீவுகள் தொடங்கி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சென்ற அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். காந்தியின் தீவிர பக்தரான செட்டியார் அவரைப் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு நாட்டிலும் காந்திக்கு இருக்கும் மதிப்பைக் கண்டு பூரிக்கிறார். ஜப்பானின் புகழ்பெற்ற கவிஞர் யோனே நோகுச்சியைச் சந்தித்ததுபற்றி பதிவுசெய்திருக்கிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ரயில்வே உணவகத்தில் சந்தித்த இனவெறுப்புச் சம்பவமும் அவர் எழுத்தில் பதிவாகியிருக்கிறது. சில நாட்களே தங்கினாலும் அந்தந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களைக் கூர்மையாகக் கவனித்தவர் அவர். எங்குமே தன்னை முன்னிறுத்தாத அவரது எளிமைதான் அவரது எழுத்தின் சிறப்பு.​

SCROLL FOR NEXT