நமது நவீன யுகத்தின் அறிவியலாளர்களிலேயே தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். நமது அண்டத்துக்கான விளக்கத்திலிருந்து தொடங்கி இன்று நமது இருப்பிடத்தை உலகுக்குத் தெரியப்படுத்தும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் வரையில் அனைத்து அறிவியல் முன்னேற்றத்துக்கும் காரணியாக இருந்த ‘சிறப்பு சார்பியல் கோட்பாட்’டை (E=mc2 மறக்குமா?) 1905-ல் அவர் கண்டறிந்தார். இத்தகைய மகத்தான ஆளுமை தன் இறுதி நாட்களை, இளம் விஞ்ஞானிகளும்கூட அவரிடம் நெருங்கி வராத வகையில், பேச்சுத் துணையின்றி, சிந்தனைப் பரிமாற்றத்துக்கு உற்ற ஆளின்றி, தன்னந்தனியாகக் கழிக்க நேர்ந்தது மிகப் பெரிய அவலம்தான்.
இதற்கான காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறது இந்த வாழ்க்கை வரலாறு. நவீன உலகத்தின் உச்சத்துக்கு அவரை இட்டுச்சென்ற அவரது கற்பனையும் தன்னம்பிக்கையும் முழுமுதல் உண்மையைக் கண்டறிவதற்கான அவரது வேட்கையில் எவ்வாறு தடைகளாக மாறின என்ற அவலத்தை மிகுந்த கழிவிரக்கத்துடன் வெளிப்படுத்தும் நூல் இது.
- வீ. பா. கணேசன்