விழாவில், ‘காந்தி: ஒரு பெயர், ஒரு வாழ்க்கை, ஒரு உலகம்’ என்ற அமர்வில் இலக்கிய விமர்சகர் ஜி.என்.டேவி, கவிஞர் - கலைஞர் குலாம் முஹம்மது ஷேக், எழுத்தாளர் அமன்தீப் சாந்து மூவரும் கலந்துரையாடினர். அமர்வில் ஜி.என்.டேவி பேசியது:
“2002 குஜராத் வகுப்புக் கலவரத்தின்போது மகா ஸ்வேதா தேவியை ஆமதாபாதில் வகுப்புக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ஓர் முகாமுக்கு அழைத்துச் சென்றேன். என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரை இழந்துவிட்டேன் என்று ஒரு பெண் கண்ணீருடன் கதறினார். மகா ஸ்வேதா தேவி உடனே மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து கண் விழித்த அவர் ‘சபர்மதி ஆசிரமத்துக்கு என்னைக் கூட்டிச் செல்லுங்கள்’ என்றார்.
‘தாங்க முடியாத மனபாரத்தால் துயருற்ற அவர் அதற்கான நிவாரணத்தை காந்தியடிகளின் பாதம் படிந்திட்ட ஆசிரமம்தான் தர முடியும்’ என்று கருதினார். இந்தியாவிலேயே அதிகம் நினைவுகூரப்படும் சோகமான கதாநாயகர் காந்திதான்” என்றார் டேவி.