திரைப்படங்கள் குறித்த ரசனையை மக்களிடையே பரப்ப முனைந்த திரைப்படக் கழகங்களே இந்தியாவில் மாற்றுத் திரைப்பட இயக்கம் தோன்றுவதற்கான அடித்தளமாக இருந்தன.
பாம்பே (1940), கல்கத்தா(1947), மதராஸ் (1957), திருவனந்தபுரம்(1965) ஆகிய முன்னோடி திரைப்படக் கழகங்கள் உலகத்தின் சிறந்த திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற உலகம் போற்றிய திரைப்பட இயக்குநர்களையும் உருவாக்கித் தந்தன. இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கான விதையையும் இவையே போட்டன. திரைப்படக் கலையின் வரலாற்றை, அதன் நுணுக்கங்களை சாதாரண ரசிகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் திரைப்பட ரசனைக்கான பயிற்சிகளையும் இவை நாடெங்கிலும் வழங்கிவந்தன. இன்று இந்தியாவின் கடைக்கோடியில் பேசப்படும் மணிப்புரி மொழியில் திரைப்படம் உருவாவதற்கான உத்வேகமும் மாற்றுத் திரைப்பட இயக்கம் கொடுத்ததே. புதிய தொழில்நுட்ப வீச்சால் திரைப்படக் கழகங்கள் மேலும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவரும் பின்னணியில் இந்திய திரைப்படக் கழகத்தின் வரலாற்றை இந்நூல் முன்வைக்கிறது.