ஒரு பத்திரிகையாளராக நீண்ட அனுபவம் பெற்றவர் மணா. அவரது பத்திரிகைத் துறைப் பயணத்தில் சாதாரணர் முதல் சாதனை நிகழ்த்தியவர்வரை பலரையும் சந்தித்துள்ளார். பிறரறியாத, சுவையான, திடுக்கிடவைக்கும், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பலவற்றை எதிர்கொண்டுள்ளார். அரசியல், இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட பல துறைகளிலும் பிறர் ஒருபோதும் அறிந்திட முடியாத பல்வேறு தகவல்களை அறிந்தவராகவும் அதை அப்படியே எழுத்தில் வடிக்கும் ஆற்றல் கொண்டவராகவும் மணா உள்ள காரணத்தால் இந்நூல் சாத்தியப்பட்டிருக்கிறது.
அறிந்த ஆளுமைகள் பற்றிய அறியாத தகவல்களைப் படிக்கும்போது சிறு குழந்தைகள் போல் உற்சாகப்பட முடிகிறது. அதே நேரத்தில் நெஞ்சத்தை ரணமாக்கும் சில சம்பவங்களையும் படிக்கும்போது மனம் அதிர்ச்சியால் உறைகிறது. இவையெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்கிறார் மணா.
நேரடியாக நின்று கதை சொல்வதுபோல் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார் மணா. உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுக்காமல் உண்மைக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரைகளில் பொதிந்துள்ள உண்மை நெஞ்சைச் சுடுகிறது.
- ரிஷி