இலக்கியம்

நீங்களும் வாசியுங்களேன்: கிரிக்கெட்டுக்கு இடஒதுக்கீடு தேவையா?

இராம.சீனுவாசன்

85 ஆண்டு இந்திய கிரிக்கெட் (5 நாள் போட்டி) வரலாற்றில் 289 ஆண்கள் விளையாடியுள்ளார்கள். அதில் 4 பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 10-க்கும் குறைவானவர்களே இஸ்லாமியர். கிரிக்கெட்டில் மேல்தட்டு மக்கள் மட்டுமே ஆர்வம்காட்டுவதாக ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், பெண்கள் கிரிக்கெட் குழுவில் அதிக அளவில் சிறுபான்மையினர் இருப்பது இந்தக் காரணத்தை மறுதலிக்கிறது அல்லவா?

ஆண்கள் கிரிக்கெட்டில் அதிக வருவாய்க்கான வாய்ப்பு இருப்பதால், கிரிக்கெட் கிளப்களும் அதிகப் பொருளாதாரத்துடன் நடைபோடுகின்றன. கிரிக்கெட் வீரர்களைத் தங்கள் நிறுவனத்தில் வேலையில் சேர்ப்பதிலும் விளம்பரத் தூதராக நியமிப்பதிலும் கம்பெனிகள் கவனம் செலுத்துகின்றன. எனவே, பொருளாதாரத்தில் செழிப்போடு இருப்பவர்கள் மட்டுமே கிரிக்கெட்டின் மேல் நிலையை அடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இந்தப் பின்னலுக்குள் சாதியும் சேர்ந்துகொண்டது.

இதற்கு இடஒதுக்கீடு தீர்வாக அமையலாம் என்பது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சூழல் உணர்த்தும் விஷயம். தேசிய கிரிக்கெட் குழுவின் 11 பேரில் குறைந்தது 6 பேர் வெள்ளையர் அல்லாதவர், அதில் 2 பேர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. பள்ளி அளவிலான கிரிக்கெட் குழுவிலும் இதைக் கடைப்பிடிக்க தென்னாப்பிரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலும் கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டை சட்டரீதியாக செயல்படுத்த முடியும் என்கிறது இந்தக் கட்டுரை.

Bhawnani, Gaurav and Shubham Jain, “Does India Need a Caste-based Quota in Cricket?”, Economic and Political Weekly, 21-26 May, 2018.

SCROLL FOR NEXT