இந்த ஆண்டுக்கான (2018) வாசக சாலை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த சிறுகதை நூலுக்கான விருதை எழுத்தாளர் கணேசகுமாரன் பெற்றுள்ளார். இவருடைய ‘வில்லா 21’ என்கிற சிறுகதை தொகுப்புக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் அமைந்துள்ள 'மேகா’ பதிப்பக வெளியீடான ‘வில்லா 21’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் ஆனந்த விகடன், உயிர்மை, புதிய பார்வை, நான்காவது கோணம், நடுகல் போன்ற இதழ்களில் வெளிவந்து இலக்கிய அன்பர்களின் பெரும் பாராட்டுகளையும், விமர்சனங்களுக்கும் ஆளானவை.
‘வில்லா 21’ கணேசகுமாரனின் நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும். இதற்கு முன் -வெளியான இவரது 'பெருந்திணைக்காரன்', ‘பைத்திய ருசி', ' மிஷன் காம்பவுண்ட்' ஆகிய நூல்களும் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் கவனத்துக்குரிய வகையில் வாசித்து வரவேற்கப்பட்டவை.
ஏற்கெனவே இவரது படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக - கணேசகுமாரனுடைய ‘பைத்திய ருசி’ என்கிற சிறுகதை நூல் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலுக்கான ஆனந்தவிகடன் விருது பெற்றது என்பட்து குறிப்பிடத்தக்கது.
'பாதரசப் பூனைகளின் நடனம்’,'சந்திரன், பானுமதி மற்றும் வில்சன்’, 'காமத்தின் நிறம் வெள்ளை’ போன்ற மனித மனங்களிடையே புகுந்து எழும் உணர்வு எல்லைகளை தாண்டியும் வாழ்வு உள்ளது என உரக்கப் பேசும் கதைகளை கொண்டது ‘பைத்திய ருசி’. இதனை அண்மையில் காலஞ்சென்ற ‘மதுக்குவளை மலர்’ எனும் அருமையான படைப்பினை தந்த வே.பாபுவின் ‘தக்கை’ பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
கணேசகுமாரனின் ‘வில்லா 21’க்கு வாழ்த்துகள்.