இலக்கியம்

எல்லோருக்குமான பாரதக் கதை

ரிஷி

இந்தியாவின் பிரதான இதிகாசங்களில் ஒன்று மகா பாரதம். இதன் பிரதான கதையும் கிளைக்கதைகளும் படிப்போரைப் பரவசப்படுத்துபவை. மகாபாரதக் கதையைப் படிக்க எல்லோரும் விரும்புவது இயற்கை. ஆனால் மகாபாரத வாசிப்பு அசுர உழைப்பைக் கோருகிறது. முழுக் கதையையும் படிக்க வேண்டும் ஆனால் எளிதாகவும் விரைவாகவும் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வம் அனைவருள்ளும் எழும்.

இந்த ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் இந்து பப்ளிகேஷன்ஸ் மஹா பாரதம் என்னும் நூலை வழங்கியுள்ளது. விகரு.இராமநாதன் பதிப்பித்துள்ள இந்நூலின் உரை நடையைக் கவிஞர் பத்ம தேவன் எழுதியுள்ளார். மகா பாரதத்தின் 18 பர்வதங்களையும் இந்த நூல் தன்னுள் அடக்கியுள்ளது. ஆனால் வழக்கமான பாரதக் கதைகள் போல் இந்நூல் அதிக எண்ணிக்கையிலான பக்கங்களைக் கொண்டிருக்க வில்லை. 648 பக்கங்களுக்குள் முடித்துவிடுகிறது.

18 பர்வங்களின் பெயர்க் காரணங்களுக்கான விளக்கமும், மகா பாரதக் கதைமாந்தர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகமும் நூலின் முதலிலேயே தரப்பட்டுள்ளன. மகாபாரதத்தைப் படிக்க விரும்புவர்களுக்கான நுழைவு வாயிலாக இந்நூல் விளங்குகிறது. அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் எளிய நடையில் உள்ள இந்நூல் தொடக்க நிலை வாசகர்களின் விருப்பத்தை எளிதில் பூர்த்திசெய்கிறது.

மஹா பாரதம்
கவிஞர் பத்மதேவன்
விலை ரூ. 320,
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
100, கெனால்பேங்க் ரோடு
கிழக்கு சி.ஐ.டி. நகர்
சென்னை-35
தொலைப்பேசி: 2431 3646

          
SCROLL FOR NEXT