இலக்கியம்

நாடகமானது புதுமைப்பித்தனின் 6 சிறுகதைகள்

செய்திப்பிரிவு

சென்னை: எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ‘நம் அருமை புதுமைப் பித்தன்’ என்னும் நாடகம், பிப்.3-ம் தேதி மாலை 4.30க்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் அரங்கேற்றப்பட இருக்கிறது. தியேட்டர் கோநாடகக் குழுவின் முதல் தயாரிப்பான இந்நாடகத்தைப் பிரசன்னா ராம்குமார் இயக்கியுள்ளார். புதுமைப்பித்தனின் ‘ஆற்றங்கரை பிள்ளையார்’, ‘குப்பனின் கனவு’, ‘ஒப்பந்தம்’, ‘கட்டில் பேசுகிறது’, ‘விபரீத ஆசை’, ‘தனி ஒருவனுக்கு’ ஆகிய 6 சிறுகதைகள் நாடகமாக நிகழ்த்தப்பட இருக்கின்றன.

பிரசன்னா ராம்குமாரும் இந்நாடகத்தில் பணியாற்றிய வேறு சிலரும்நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகங்களில் பணியாற்றியவர்கள். ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த சில இளைஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தக் குழுவினர் இதற்கு முன்பு தயாரித்தகுறு நாடகமான ‘டாஸ்மாக்’ வரவேற்பைப் பெற்றது. ‘நம் அருமை புதுமைப்பித்தன்’ நாடகத்தைக் காண்பதற்கான நுழைவுச் சீட்டுகளை புக்மைஷோ இணையதளத்தில் (https://shorturl.at/AN124) பெற்றுக்கொள்ளலாம்

SCROLL FOR NEXT