குவாஹாட்டி: உலக பாரம்பரியமிக்க டார்ஜிலிங் மலை ரயிலின் முதல் பெண் டிக்கெட் பரிசோதகராக சரிதா யோல்மோ நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று தனது பணியை மேற்கொண்டு அவர் சாதனை படைத்தார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட டார்ஜிலிங் மலை ரயில் உலக பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 1881-ல் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த 1999-ல் யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையிலான 88 கிலோமீட்டர் நீளம் மற்றும் 6,870 அடி உயரத்தை இந்த மலை ரயில் பாதை இணைக்கிறது. டார்ஜிலிங் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. “உலக அளவில் பிரசித்தி பெற்ற நூற்றாண்டு சிறப்புமிக்க மலை ரயிலில் முதல் பெண் டிக்கெட் பரிசோதகர் என அறியப்படுவதை எண்ணி பெருமை கொள்கிறேன்” என சரிதா தெரிவித்தார்.
“மலை ரயிலில் சரிதாவின் வருகை என்பது வெறும் பணி சார்ந்த பிரதிநிதித்துவம் மட்டுமல்ல. இது இந்திய ரயில்வேயில் தொழில்நுட்ப மற்றும் களப்பணியில் மகளிரின் முன்னேற்றத்தை குறிப்பிடும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும்” என வடக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் கபின்ஜல் கிஷோர் சர்மா தெரிவித்தார்.