படம்: மெட்டா ஏஐ

வாழ்வியல்

மெல்லப் பிடியை இறுக்கும் ஜெனரேட்டிவ் ஏஐ - ‘அடிமை’ ஆவதை தடுப்பது யார் பொறுப்பு?

பாரதி ஆனந்த்

உங்கள் உறவுகளுடனோ, நண்பர்களுடனோ அல்லது அலுவலக சகாக்களோடு தற்கால உரையாடல்களின்போது சாட்ஜிபிடி (ChatGPT)-யை நீங்கள் ஏதேனும் தெளிவு, தரவு, கூடுதல் தகவல் வேண்டி நாடாத நாள் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்களேன். நிச்சயம் இல்லை என்பதே நம்மில் பலரது பதிலாக இருக்கும்.

ஆக்கமுறை ஏஐ என்று தமிழில் அறியப்படும் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ (Generative AI) இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. முன்னர் கூகுள் ஆண்டவர் என்று தேடுபொறிக்கு பெயரிடப்பட்ட நிலையில், எங்கேயும் எப்போதும் இடத்தைப் பிடித்திருக்கின்றன ஏஐ சாட் பாட்கள். ஆனால், அதற்கு ஓர் இருண்ட முகமும் இருக்கிறது. அதைப் பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதன் அதீதப் பயன்பாடு நம் மூளையில் ஒரு பழக்கத்துக்கு அடிமையாவதற்கு இணையான நரம்பியல் அமைப்பை (நியூரல் பேட்டர்ன்களை) உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடிக்‌ஷனுக்கு முந்தைய கட்டமாகக் கருதலாம் என்றும் கூறப்படுகிறது.

மெட்டா நிறுவனமும், யூடியூப் நிறுவனமும் அண்மையில், சமூக ஊடகப் பயன்பாட்டினால் ஏற்படும் அடிக்‌ஷன் தொடர்பான வழக்குகளில் அண்மையில் தோல்வியைத் தழுவியன.

அமெரிக்காவும் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், டெக் ஜாம்பாவன்கள் மனிதர்களை அடிமையாக்கும் ‘போதை இயந்திரங்களை’ உருவாக்குகின்றன என்று நீதிமன்றம் விளாசியது.

அதுவரை ஸ்க்ரீன் டைம் நிர்வாகம் என்பது தனிநபர் அல்லது பெற்றோரின் கடமையென்று பொறுப்பை கைகழுவிவந்த டெக் ஜாம்பவான்களுக்கு நீதிமன்றம் கொடுத்த அடி உண்மையில் பலமானதுதான்.

இப்போது சோஷியல் மீடியா பயன்பாட்டுக்கு நீதிமன்றம் வைத்த பார்வையை நாம் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாட்டுக்கு பொருத்திப் பார்ப்போமேயானால், இங்கேயும் அதீத பயன்பாட்டுக்கு யார் காரணம் என்ற கேள்விதான் முதலில் உருவாகும்.

ஜெனரேடிவ் ஏஐ அதீதப் பயன்பாடு தொடர்பான விவாதங்கள் எழும் சூழலில், அதை அடிமையாக்கும் அடிக்‌ஷன் என்று சொல்லாமல், ’பிரச்சினைக்குரிய பயன்பாடு’ என்று சொல்லலாம் என்று அத்துறை சார் நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், ஜெனரேடிவ் ஏஐ பயன்பாடு குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள், அடிமையாக்கும் பழக்கம் என்று சொல்லும் நிலைக்கு ஏற்கெனவே அது வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் உணர்வுப்பூர்வமான பல்வேறு விஷயங்களுக்குக் கூட நண்பர்கள் / உறவினர்களைத் தாண்டி ஏஐ சாட் பாட்-களின் மீது நம்பிக்கை கொள்வது அதிகரித்துள்ளது. இது நிஜமான உறவுகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். காலப்போக்கில் நம்மை தனிமைப்படுத்தும். காலப்போக்கில் தனிப்பட்ட வாழ்வில், தொழில்முறை வாழ்விலும் சிக்கல்களை உருவாக்கும் என்ற வாதம் வைக்கப்படுகிறது.

யார் பொறுப்பு?

ஜெனரேட்டிவ் ஏஐ ஒரு தனிநபரை ஒரு பழக்கத்துக்கு அடிமையாதலை நோக்கி இட்டுச் செல்லும் என்றால் அதைத் தடுப்பதில் அரசுக்கும், தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கும், சுகாதார அமைப்புகளுக்கும் சமமான பொறுப்பு இருக்கிறது என்று கொள்ளலாம்.

வரலாற்றில் அதற்கான சான்றுகள் இருக்கின்றன. புகைப்பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு என்றாலும், அதற்கு இளைஞர்கள் சாரை சாரையாக விழுகிறார்கள் என்றாலும் அந்தத் தொழில் நின்றுவிடவில்லை. ஒருகட்டத்தில் கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள், அச்சுறுத்தும் புகைப்படங்கள் கொண்டுவரப்பட்டன. ஏஐ பயன்பாடும் - புகைப்பிடிக்கும் பழக்கமும் ஒன்றாகிவிட முடியாது என்றாலும், ஒரு முடிவை எட்ட ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சிகரெட், சூதாட்டம், ஜெனரேட்டிவ் ஏஐ என எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அது ஏற்படுத்துக் கூடிய எதிர்மறை விளைவு பற்றி அறிந்திராமல் இருக்க மாட்டார்கள். ஒருவேளை கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக நன்மைக்காக அதைச் செய்யலாம்.

அப்படியிருக்கும் பட்சத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு அடிக்‌ஷனாவதைத் தடுப்பதில் 4 பேரை பொறுப்பாளர்களாக நாம் கருதலாம்.

அரசாங்கமும், ஒழுங்குமுறை ஆணையங்களுக்கும்தான் முதல் பொறுப்பு உள்ளது. அதீதமான ஜெனரேட்டிவி ஏஐ பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்தல், மற்ற பொறுப்பாளர்களை இதில் பங்களிக்கச் செய்ய ஊக்குவித்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஆனாலும், இதில் பெரும் பொறுப்பு என்பது சம்பந்தப்பட்ட டெக் ஜான்பவான்களிடம்தான் இருக்கிறது. ஏனெனில் இந்த நிறுவனங்களிடம்தான் பயன்பாட்டாளர்களின் விவரங்கள் உள்ளன. அதைக் கொண்டுதான் அந்த நிறுவனங்கள் யார் யார், எதை எதை அதிகம் பார்ப்பார்கள், திரும்பவும் அதேபோன்றதை பார்க்க, பயன்படுத்த விரும்புவார்கள் என்பதை பகுப்பாய்வு செய்து தங்கள் தடத்தில் டிஜிட்டல் காலத்தில் வலுவாகப் பதிக்கின்றன.

அரசாங்கம், டெக் நிறுவனங்கள் தாண்டி கல்விசார் ஆராய்ச்சியாளர்களுக்கும் முக்கியப் பொறுப்புள்ளது. அவர்கள்தான் ஒரு விஷயம் அடிக்‌ஷன் என்று எப்படி வரையறுப்பது என்பதற்கான தரவுகளை ஆதாரங்களுடன் திரட்டித் தர வேண்டும். அதுதான் அரசியல், சட்ட ஆலோசனைகளுக்கு அடிப்படையாக மாறும்.

இறுதியாக பொதுச் சமூகத்துக்கான பொறுப்பு. நுகர்வோராக இருக்கும் அவர்கள்தான் எந்தப் புள்ளியில் அது தங்களை ஆட்கொள்கிறது என்பது குறித்து தெரிவித்து ஆரம்ப அறிகுறிகளை வரையறுக்க உதவ வேண்டும்.

ஆனால் இந்த நான்கு தரப்புமே ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தீர்வு கிட்டும். தனித்தனியாக இயங்கி எதுவும் செய்ய இயலாது.

இப்போதைய சூழலில் ஜெனரேட்டிவ் ஏஐ அடிக்‌ஷன் ஆரம்ப நிலையில் இருப்பதால், அதை தடுக்க வேண்டிய ஸ்டேக் ஹோல்டர்கள் எல்லோருமே அது இன்னொருவரின் பிரச்சினை என்றே பார்க்கின்றனர். ஆனால், உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2005-ல் நடைமுறைக்கு வந்ததுபோல, ஏஐ பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன.

இவையெல்லாம் நடந்தேறிக் கொண்டிருக்கும்போதே, பயனாளர்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். ஒரு தனி நபர் தன்னைத் தானே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

புகைப்பழக்கம், மதுப் பழக்கத்தில் தனிநபரின் கட்டுப்பாடு செயல்படாத நிலையில்தான் அதைப் பயன்படுத்துவதற்கான வயது என்ன, அதன் அளவு என்ன போன்றவற்றில் பல்வேறு விதிமுறைகள் வந்தன. அந்த வரிசையில் ஏஐ தொழில்நுட்பமும் அன்றாட தேவையாக மாறிவிட்ட நிலையில், அது தொடர்பான தனிநபர் ஒழுக்கம்தான் எதிர்காலத்தில் அதன் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை வகுக்க அடித்தளமாக அமையும்.

SCROLL FOR NEXT