சென்னை: தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக மக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதைவிட அதற்கு தீர்வு கண்டறிவது மேலானது என நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்தார்.
தெருநாய்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற என்ஜிஓ சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பலர்கலந்துகொண்டனர். பேரணியில் இரண்டு பசு மாடுகளையும் அழைத்து வந்திருந்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், நாய்களை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் தெரு நாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களிடம் நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:நம் கண் முன்னால் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை பார்த்து வருகிறோம். தெரு நாய்களை வலுக்கட்டாயமாக அகற்றி காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு மிகவும் சுலபமான வழியாக இருப்பது தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டு அவற்றை அதே இடத்தில் மீண்டும் விட்டுவிட வேண்டும்.
தெரு நாய்கள் தொடர்பாக மக்களிடையே அதிகளவில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாய்கள் மனிதர்களை கடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது, ரேபிஸ் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. அதுகுறித்து மக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதைவிட அதற்கு ஒரு தீர்வு கண்டறிவது மேலானது. இவ்வாறு அவர் கூறினார்.