விநாயகர் சிலைகளை விற்பனை செய்யும் அப்துல் ஹக்கீம்

 
வாழ்வியல்

சூலூர்: விநாயகர் சிலைகள் விற்பனையில் கவனம் ஈர்க்கும் இஸ்லாமிய தொழிலாளி

இரா.கார்த்திகேயன்

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் விநாயகர் சிலைகளை விற்கும் பணியில், இஸ்லாமிய தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் நாளை (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர் கடந்த 3 நாட்களாக விநாயகர் சிலைகளை விற்று வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விநாயகர் சிலை விற்பனையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளி அப்துல் ஹக்கீம் கூறும்போது: “பூக்கடைக்கு சீசன் வியாபாரத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்து செல்வேன். தற்போது விநாயகர் சிலை விற்பனைக்காக இங்கு வந்துள்ளேன். பல்வேறு ரகங்களில் சிலைகள் தயாரிக்கபப்ட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ரூ.100-லிருந்து ரூ.7,500 வரை சிலைகளை விற்கிறோம். நான் ஒரு முஸ்லிம் என்றாலும், என்னிடம் சிலைகளை வாங்க யாரும் எவ்விதத் தயக்கமும் காட்டுவதில்லை. விற்பனையில் ஈடுபட்டிருக்கும் என்னை பார்த்து, சிலைகளை வாங்கிக்கொண்டு ஆச்சர்யர்த்துடன் செல்கின்றனர்” என்றார்.

பூக்கடை உரிமையாளர் கூறும்போது, “மனித மனங்களில் உள்ள பல்வேறு சிக்கல்களை தீர்க்கவும், உற்சாகம் அளிக்கவும் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. புயல், வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் துயரங்கள், பெருந்தொற்று காலங்கள் என மனித சமுதாயம் துயரடையும் நேரங்களில், மதங்களை கடந்த மனிதம் எப்போதும் சமூகத்தில் எஞ்சும். விநாயகர் சதுர்த்தியின் போது பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறும்.

அதேபோல் இன்றைக்கு விநாயகர் சிலை விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளியையும், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவே பலர் ஆச்சர்யமாக பார்த்துவிட்டு சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.” என்றார்.

SCROLL FOR NEXT