தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், வயலூரில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் சிற்பம் மற்றும் நந்தியுடன் கூடிய கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
திருநீலக்குடி அருகில் வயலூரச் சேர்ந்த ராமய்யன், வாய்காலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெயர் தெரியாத சிலையை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலாவிற்கு தகவலளித்தார். அதன் பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர், அந்த இடத்திற்குத் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் சிலையும், அதன் அருகிலிருந்த எல்லை கல்லை ஆய்வு செய்த போது, 4 அடி உயரமுள்ள 9 வரியுடன் பழங்காலத்து தமிழ் எழுத்துக்களும், நந்தி உருவத்துடன் கூடிய நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெக்கப்பட்டன.
இது குறித்து பேராசிரியர் மு.கலா கூறியது: “அந்த ஊரைச் சேர்ந்த ராமய்யன், கடந்த சில மாதத்திற்கு முன், அங்குள்ள வாய்க்காலில் மண்ணை அகற்றும் போது, அடியிலிருந்த பெயர் தெரியாத சிலையை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, அந்த சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் சிலை எனத் தெரிய வந்தது.
இச்சிலை மூன்றடி உயரம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 4 கரங்களில், வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் பாம்பையும், வலது முன் கரத்தில் சூலத்தையும், இடது முன்கரத்தில் கபாலத்தையும் வைத்துள்ளார்.
அவரது தலையில் நீண்ட ஜடாபாரமும், மகுடமும், காதுகளில் பத்திர குண்டலங்களும், மார்பில் ஆபரணங்களும், முப்புரி நூலுமுள்ளது. இடுப்பின் இடையில் பாம்பினை அணிந்தவாறு நிர்வாணமாக நின்ற கோலத்திலுள்ளது.
இச்சிலை இப்பகுதியில் பல்லவர் காலத்து சிவன் கோயில் இருந்து, அந்த கோயில் காலப்போக்கில் அழிந்திருக்கக்கூடும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சேத்ரபாலர் சிற்பமும், ஒரு சிவலிங்கமும் அங்குள்ளது. தற்போது வாரந்தோறும் 2 நாட்கள் மட்டும் வழிபாடு செய்து வருகின்றனர்.
இதேபோல் அதனருகிலிருந்த எல்லை கல்லாக பயன்படுத்தி வந்த 3 அடி ஆழத்திற்கு புதைந்திருந்த கல்வெட்டை ஆய்வு செய்தபோது, அதில், நாயக்கர் கால தமிழ் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. அந்த கல்வெட்டில் ஒரு நந்தி(காளை), சூலம், மழு, கொடி போன்ற சிவ வழிபாட்டை குறிக்கும் விதமாக கல்லில் கோட்டுருவாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 9 வரி கொண்ட பழங்காலத்து எழுத்துக்களும் உள்ளது. அவற்றில் "சர்வசித்தி வருடம் தை மாதம் ஐந்தாம் திரு நல்ல நாளில் முடி சூட்டிக்கொண்டதன் பேரில் மாடு தானம் வழங்கப்பட்டுள்ளது" எனப் பதிந்துள்ளது.
இதில் முடிசூடியவரின் பெயர் சிதைந்து காணப்படுவதால், யார் என என்று அரிதியிட்டு கூற முடியவில்லை. இந்த எழுத்துக்களை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது, தஞ்சாவூர் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவர்கள் சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடை குறித்த கல்வெட்டாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.