கோவை: வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயல்பைவிட நடப்பாண்டு கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகப்படியான வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தாகம் இல்லாவிட்டாலும், போதிய இடைவெளியில் குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிறிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத ஆடைகள், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி எடுத்துச்செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, எலுமிச்சை சாறு, மோர், பழரசங்கள் ஆகியவற்றையும் பருகலாம். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது கட்டாயம் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், மாமிச கொழுப்பு சத்துள்ள உணவுகள், கார வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், முதியோர் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.