ராமேசுவரம்: பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் (29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. ‘செரிபரல் பால்ஸி’ என்ற பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர். இவரால் பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. ஆனாலும், இவரது பெற்றோர் இவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சலை ‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.
ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்: பொதுவாக நீந்துபவர்கள் கை, கால்களை அசைத்து ‘ப்ரீ ஸ்டைல்’ முறையில் நீந்துவர். ஆனால், இவரால் கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் நெஞ்சை அசைத்து (`ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' ) நீந்துவார்.கடந்த 2018-ல் தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர்- புதுச்சேரி இடையேயான தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக மத்திய அரசின் சமூக நீதித் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த முன்மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடமிருந்து பெற்றார். மேலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு 40 பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவிலுள்ள தனுஷ்கோடி வரையிலுமான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை காலை பயிற்சியாளர்கள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.
தலைமன்னாரில் புதன்கிழமை மாலை 05.10 மணியளவில் நீந்தி புறப்பட்டு வியாழக்கிழமை மதியம் 01.30 மணியளவில் 20.20 மணி நேரம் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் வந்தடைந்தார். இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) பார்வையாளர் விஜயக்குமார் உறுதி செய்தார். அரிச்சல்முனை வந்தடைந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸை அவரது குடும்பத்தினர், ராமேசுவரம் டி.எஸ்.பி உமா மகேஸ்வரி, சுங்கத்துறை கண்காணிபாளர் சம்பத், மெரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இது குறித்து ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸின் பெற்றோர்கள் கூறியதாவது, “ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்த போதும், அவரை எதிலாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் நீச்சல் கற்றுக்கொடுக்க தொடங்கினோம். அவருக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். ‘செரிபரல் பால்ஸி’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வளர்ப்பதே சிரமம். இவரைப் போன்று ஏராளமான குழந்தைகள் உள்ளனர்.
அவர்களின் பெற்றோர்களுக்கு இவர் ஓர் ஊக்குவிப்பாளராக இருப்பார். இவரைப்போன்ற குழந்தைகளை பெற்றோர் காப்பகங்களுக்கு அனுப்பாமல் தாங்களே பாதுகாத்து வளர்க்க வேண்டும். பாக்ஜலசந்தி கடலை சுமார் 30 கி.மீட்டர் இரவும் பகலும் நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளது பெருமையாக உள்ளது” என்றனர். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.