வாஷிங்டன்: “நான் படிப்பில் கவனம் செலுத்துபவன் அல்ல. கிரிக்கெட் விளையாட அதிகம் பிடிக்கும்” என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சிஐஓ ரியான் ரோஸ்லான்ஸ்கி உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
55 வயதான சத்யா நாதெள்ளா இந்தியாவைச் சேர்ந்தவர். ஹைதராபாத் நகரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 1992-ல் பணிக்கு சேர்ந்தார். 2014-ல் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவர் இந்த நேர்காணலில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
“நான் இன்று இந்த இடத்தில் இருக்க காரணமே எனது அம்மாவும், அப்பாவும்தான். அதில் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. என் அப்பா ஐஏஎஸ் அதிகாரி. அம்மா சமஸ்கிருத பேராசிரியர். இருவரும் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தனர். எனது எதிர்காலத்தை என் கையில் கொடுத்தனர்.
கம்யூட்டர்தான் என் எதிர்காலம் என உறுதியாக இருந்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். நான் முதன்முதலில் கணினி பயன்படுத்தியது எனக்கு நன்றாக நினைவு உள்ளது. என்னை கணினி பக்கம் ஈர்த்தது மென்பொருள்தான். நான் படிப்பில் கெட்டிக்காரன் இல்லை. கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் அதிகம் செலுத்துவேன். மிடில் கிளாஸ் குடும்பம் எதிர்கொள்ளும் சவாலை நான் அறிவேன்” என அவர் இதில் தெரிவித்துள்ளார்.