சென்னையில் பனிமூட்டம் 
வாழ்வியல்

சென்னையில் கொசுத் தொல்லை, காய்ச்சல் பாதிப்பு, குளிர் அதிகரிப்பு... இம்மூன்றுக்கும் தொடர்பு என்ன?

கண்ணன் ஜீவானந்தம்

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கும், காய்ச்சல் பாதிப்புக்கும், தற்போது நிலவும் கடும் குளிர் உடன் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொசுத் தொல்லையும், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மூன்றுக்கும் தொடர்பு உள்ளதாக அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம்:

சென்னை மாநகராட்சியின் பூச்சியியல் வல்லுநர் ஒருவர்: “சென்னையில் எப்போதும் பிப்ரவரி மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கும். ஆனால், தற்போது வெப்ப நிலை மிகவும் குறைவாக உள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் வரை சென்று உள்ளது. இதன் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு கொசு 21 நாட்கள் வரை வாழும். இந்த வெப்ப நிலையின் காரணமாக 20 முதல் 30 நாள் வரை கொசுக்கள் வாழ்கின்றன. இதன் காரணமாகத்தான் சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.”

சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர்: “இந்தக் காலநிலை என்பது கொசுக்களுக்கு ஏற்ற காலநிலை தான். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் கொசுத்தொல்லை தொடர்பான புகார்கள் வந்து கொண்டே உள்ளன. இதனை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் புகை பரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணி தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்திற்கு நடைபெறும். இதனைத் தொடர்ந்து கொசு பாதிப்பு இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.”

அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்: “சென்னையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. தட்ப வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ்கள் தனது நிலையை மாற்றிக்கொள்ளும். அந்த நிலை மாறும் காலமாக பிப்ரவரி மாதம் இருப்பதால் டெங்கு, டைபாய்டு, எலி காய்ச்சல், வைரல் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்றவை ஏற்படுகிறது. கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எனவே, பொதுமக்கள் உரிய மருத்துவர்களை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருந்தகத்தில் மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.”

SCROLL FOR NEXT