கோவை செம்மேடு ஈஷா மாதிரி பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட கேரட்டுடன், ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தினர். 
வாழ்வியல்

சமவெளிப் பகுதியில் கேரட் சாகுபடிக்கு வழிகாட்டும் ஈஷா மாதிரிப் பண்ணை

செய்திப்பிரிவு

கோவை: ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி முகா கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரிக்கிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட், பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.

நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும்போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது தெரியவருகிறது. கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது.

இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இதன் அறுவடையில் 1.5 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில் நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம்.

இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT