மானாமதுரையில் தயாரிக்கப்பட்டுள்ள மண்பானைகள். 
வாழ்வியல்

மானாமதுரையில் பொங்கலுக்கு மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரையில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டத் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் சீசனுக்கு ஏற்ப அகல்விளக்கு, அக்னிச்சட்டி, கூஜா, குதிரை, சுவாமி சிலைகள், பானை, அடுப்பு போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஜன.,15-ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாகப் பொங்கல் பானை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து ஆர்டர்களும் குவிகின்றன. அதற்கேற்ப பானைகளை தயாரித்து அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறியதாவது: நாகரிகம் வளர்ந்தாலும் இன்றும் பலர் பொங்கல் பண்டிகைக்கு மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அதனால் இந்தாண்டும் எங்களுக்கு அதிகளவில் மண் பானை ஆர்டர்கள் குவிந்துள்ளன. அதற்கேற்ப தயாரித்து அனுப்பி வருகிறோம், என்றனர்.

SCROLL FOR NEXT