பேரணி மேற்கொண்ட பேச்சுலர்கள் 
வாழ்வியல்

மகாராஷ்டிரா | மணக்கோலத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி இளைஞர்கள் பேரணி

செய்திப்பிரிவு

சோலாபூர்: மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் திருமணமாகாத சுமார் 50 ஆண்கள் மணமகனை போல ஆடை மற்றும் அலங்காரம் செய்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தியுள்ளனர். இந்த பேரணியை அவர்கள் நடத்த காரணம் என்ன? இதன் மூலம் இந்த உலகிற்கு அவர்கள் சொல்ல வருவது என்ன என்பதை பார்ப்போம்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. வழக்கமாக ஏதேனும் ஒரு கோரிக்கையை வலியுறுத்திதான் ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு நிர்வாக அமைப்புகளை நோக்கி அறவழியில் மக்கள் பேரணி மேற்கொள்வார்கள். இதுவும் அது போல ஒன்றுதான்.

கவன ஈர்ப்பு வேண்டி மேளதாளங்கள் முழங்க குதிரையில் சவாரி செய்து மாப்பிள்ளை போல அலங்காரம் செய்து கொண்டு இந்த பேரணியில் பேச்சுலர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் தங்கள் மாநிலத்தில் நிலவும் ஆண் - பெண் பாலின விகிதாச்சாரத்தில் உள்ள சரிவை சுட்டிக்காட்டி உள்ளனர். அதோடு கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் சட்டத்தை (PCPNDT 1994) அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அந்த மாவட்டத்தின் உள்ளூர் அமைப்பு ஒன்று மேற்கொண்டுள்ளது.

கடந்த 2019-21 தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி மகாராஷ்டிராவின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 920 பெண்கள் என உள்ளதாக தகவல்.

SCROLL FOR NEXT