ஜெய்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் காதலுக்காக தனது பாலினத்தை மாற்றிக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பாரத்பூரில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் இருந்தவர் மீரா. அதே பள்ளியில் பயின்று மாநில அளவில் கபடி வீராங்கனையாக சிறந்து விளங்கியவர் கல்பனா. நாளாடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காதலி கல்பனாவை கரம் பிடிக்க தனது பாலினத்தை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டிருக்கிறார் மீரா. ”காதலில் எல்லாம் நியாயமே. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றினேன்” என்று கூறும் மீரா தன் பெயரை ஆரவ் என மாற்றிக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய மீரா, “நான் சிறு வயதிலிருந்து என்னை ஆணாக உணர்ந்திருக்கிறேன். ஆணாக வாழவே விரும்பினேன். இதற்கான முதல் சிகிச்சை 2019-ஆம் ஆண்டு செய்தேன்” என்றார்.
கல்பனா பேசும்போது, “நான் ஆரம்பம் முதலே அவரை விரும்பினேன். அவர் ஆணாக மாறவில்லை என்றாலும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்” என்றார். இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்திற்கு இணங்க சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.