சென்னை: தொலைபேசியில் மனநல ஆலோசனை பெறும் வகையில் இலவச எண் சேவைத் திட்டத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் "நட்புடன் உங்களோடு" மனநல சேவை திட்டத்தை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகள் துறையுடன் இணைந்து மக்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும்.
சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சேவை சார்ந்த இலவச எண்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளான மாணவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் விவகாரம்: நடிகை நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதில் எந்த விதிமீறலும் இல்லை. மத்திய அரசு வாடகைத்தாய் முறையில் கடந்த ஜனவரி மாதம் திருத்தம் கொண்டு வந்த நிலையில், அதற்கு முன்னர் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரியவந்தது. எனவே முறையான தகவல் அளிக்காத காரணத்தால் மேற்கண்ட மருத்துவ மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வாடகைத்தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புதிய சட்டத்தின்படி வாடகைத்தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமேதான் பெற முடியும். புதிய சட்டத்தில் வாடகைத்தாய் முறையில் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இத்தகைய கருத்தரிப்பு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.