ஆனையிரங்கல் பூங்காவில் ஒடிந்து விழுந்த மரங்களை கலைநயத்துடன் வடிவமைத்து அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர் | படம்: என்.கணேஷ்ராஜ் 
வாழ்வியல்

காற்றால் வீழ்ந்தது... கலையால் நிமிர்ந்தது... - ஆனையிரங்கல் அணை பூங்காவில் அசத்தும் மரச் சிற்பங்கள்

என்.கணேஷ்ராஜ்

போடி: போடிமெட்டு அருகே உள்ள ஆனையிரங்கல் அணைப் பூங்காவில் உடைந்து விழுந்த மரங்களை கலைநயமிக்கதாக மாற்றி அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாய் கவர்ந்து வருகிறது.

தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து 25 கிமீ. தூரத்தில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆனையிரங்கல் அணை அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே யானை பள்ளத்தாக்கு வியூ, நறுமணப்பொருட்கள் விற்பனை மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் காற்றில் உடைந்து விழுந்த மரங்களைக் கொண்டு கலைநுணுக்கமான வடிவமைப்புகளை உருவாக்கி உள்ளனர். இதற்காக காய்ந்த மரங்களை பாலீஷ் செய்து பூங்காவின் பல பகுதிகளிலும் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர். இதேபோல் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்காக மரத்திலான தரைமட்ட இருக்கைகளும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் வரும் குழாயை மரத்திற்குள் பொருத்தி தண்ணீர் வரும் பகுதி மட்டும் வெளியே தெரியும்படி வடிவமைத்துள்ளனர். இது பார்ப்பதற்கு விலங்கின் முகத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல உள்ளது.

விலங்கின் முகத்தில் இருந்து நீர்வருவதுபோல வடிவமைக்கப்பட்ட மரச்சிற்பம்.

மாற்றம் செய்யப்பட்ட இந்த வடிவமைப்புகள் அனைத்தும் பூங்காவில் பலத்தகாற்று, கனமழைக்கு வீழ்ந்த மரங்களில் இருந்து செய்யப்பட்டவை ஆகும். அவற்றை வெட்டி அப்புறப்படுத்தாமல் தூய்மைப்படுத்தி, வழுவழுப்பாக மாற்றி பூங்காவுக்கு உள்ளேயே காட்சிப்படுத்தி உள்ளனர்.

இதுபோன்ற கலைநயம் பார்வையாளர்களை வெகுவாய் கவர்ந்து வருகிறது. இது குறித்து கேரள மின்வாரிய சுற்றுலாத்துறை அலுவலர்கள் கூறுகையில், இது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

மேலும் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் வீழ்ந்த மரங்களை கலைப்பொருட்களாக மாற்றி உள்ளோம்.

சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்காக வடிவமைக்கப்பட்ட தரைமட்ட இருக்கை.

சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் இதன் முன்பு நின்று போட்டோ எடுத்துச் செல்கின்றனர். பூங்கா நுழைவுக்கட்டணமாக ரூ.40ம், வாகனங்களுக்கு ரூ.30-ம் பெறப்படுகிறது என்றனர்.

SCROLL FOR NEXT