சைக்கிளில் பயணிக்கும் அமர்த்தியா சென். 
வாழ்வியல்

உலக சைக்கிள் தினம் | பொருளாதார ஆய்வுக்காக சைக்கிளில் பயணம் செய்த அமர்த்தியா சென்

Ellusamy Karthik

பூவுலகிற்கு பெரிய அளவில் ஊறு விளைவிக்காத வாகனங்களில் ஒன்று மிதிவண்டி (சைக்கிள்). மனித சக்தியால் இயங்கும் இந்த சைக்கிளை போற்றும் நாள் இன்று. இத்தகைய இனிய வேளையில் தனது பொருளாதார ஆய்வு பணிக்காக மேற்குவங்க மாநிலத்தின் பல கிராமங்களில் சைக்கிளில் பயணம் செய்துள்ளார் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் கடந்த 1933 வாக்கில் பிறந்தவர் அமர்த்தியா சென். இப்போது அவருக்கு 88 வயதாகிறது. பொருளாதார ஆய்வு பணிக்காக கடந்த 1998 வாக்கில் நோபல் பரிசை வென்றவர். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அதன் பின்னர் பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். இருந்தும் மதிப்புமிக்க நோபல் பரிசை அவர் வெல்ல ஒரு சைக்கிள் உதவியதாக சொல்லப்படுகிறது.

இப்போது அந்த சைக்கிள் ஸ்வீடனில் உள்ள நோபல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவொரு கருப்பு நிற அட்லஸ் சைக்கிள் என தெரிகிறது. அவர் பயன்படுத்திய அட்லஸ் சைக்கிள் இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்திற்கும், சைக்கிளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படி இருக்கின்ற நிலையில் அமர்த்தியா சென்னுக்கு ஒரு சைக்கிள் எப்படி உதவி இருக்க முடியும். அவரது பெரும்பாலான ஆய்வு பணிகள் வறுமையில் வாடும் மக்களின் நிலையை குறித்தும், அவர்களது வாழ்வை மேம்படுத்துவது தொடர்பாகவும் அமைந்துள்ளன. பெண் மற்றும் ஆண் குழைந்தைகளுக்கு இடையே உள்ள உடல் எடை வேறுபாட்டை ஒரு ஆய்வு பணிக்காக கண்டறிய விரும்பியுள்ளார் அமர்த்தியா சென்.

அந்த பணிக்காக உதவியாளர்களை நியமித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று குழந்தைகளின் உடல் எடையை கணக்கிட வேண்டியது இவர்களது பணி. ஆனால் அவர் பணிக்கு வைத்த உதவியாளர்களுக்கு குழந்தைகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையாம். சில இடங்களில் அவர்கள் குழந்தைகளிடம் கடிகளும் வாங்கியுள்ளனர். அதன் காரணமாக யாரும் அதனை தொடரவில்லை என தெரிகிறது. தடைகள் பல வந்தாலும் தனது ஆய்வை மேற்கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார் அமர்த்தியா சென்.

அமர்த்தியா சென் பயன்படுத்திய சைக்கிள்

அதனால் அவரே மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்து, ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளார். பின்னாளில் அதை மனித வளர்ச்சி பட்டியல் பணிக்கு பயன்படுத்தியுள்ளார் என தெரிகிறது. சமூக நலன் மற்றும் வறுமை சார்ந்த ஆய்வு பணிகளுக்காக நோபல் பரிசு பெற்றவர் அவர்.

SCROLL FOR NEXT