ஊட்டியில் நேற்று தொடங்கிய சாக்லேட் திருவிழாவில் இடம்பெற்ற, அறுசுவைகளுடன் தயாரிக்கப்பட்ட சாக்லேட் மலை. | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
ஊட்டி: கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஊட்டியில் சாக்லேட் திருவிழா தொடங்கியது. இதில் இடம்பெற்ற சாக்லேட்டால் செய்யப்பட்ட நீலகிரி மலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நீலகிரியில் பிரசித்தி பெற்ற ஊட்டி வர்க்கி, யூகலிப்டஸ் தைலம், தேயிலைத்தூள் வரிசையில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்வது ‘ஹோம் மேட் சாக்லேட்’ ஆகும். இவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான இதமான காலநிலை நீலகிரியில் நிலவுகிறது.
தமிழகம், கேரள மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கோகோ விதைகளை அரைத்து, அவற்றுடன் கோகோ பட்டர் மற்றும் கரும்பு சர்க்கரை சேர்த்து ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஊட்டியில் எம் அன்ட் என் அருங்காட்சியகத்தில் 15 நாள் சாக்லேட் திருவிழா நேற்று தொடங்கியது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் அப்துல் ரகுமான், பசலூர் ரகுமான் ஆகியோர் கூறும்போது, “இந்த ஆண்டு டார்க், மில்க், ஒயிட் என மூன்று ரகங்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, 150 வகையான ஹோம் மேட் சாக்லேட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக தேன், தேயிலை, மிளகு, காளான் உட்பட நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகளில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வகைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
மேலும், 210 கிலோ சாக்லேட்டைக் கொண்டு நீலகிரி மலை போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். ரூ.60 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பல வகையான சாக்லேட்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்” என்றனர்.