நாகர்கோவில்: கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் படித்துறையில் உள்ள கற்கள் இடிந்து கடலில் விழுந்து கிடந்தன. இதனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களும், சுற்றுலா - பயணிகளும் கடலில் இறங்கி - குளிக்கும்போது பாறாங்கற்களால் உடலில் அடிபட்டு ரத்த காயத்துடன் செல்லும் துயரம் நிகழ்ந்து வந்தது.
இதைத்தொடர்ந்து கடலில் இடிந்து விழுந்து கிடக்கும் பாறாங்கற்களை அகற்ற இந்து இயக்கங்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடை மூலம் முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்தது. ராட்சத கிரேன் மூலம் கடலில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் தூக்கி அகற்றப்பட்டன. அப்போது 4 சாமி சிலைகள் கிடைத்தன.
இதில் 1 அடி உயரம் உள்ள 3 அம்மன் சிலைகள் மற்றும் ஒரு பலி பீடம் இருந்தன. கடலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சிலைகளை இந்து அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள், கன்னியாகுமரி கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிலைகள் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.