வாழ்வியல்

அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் - கவனம் ஈர்த்த வடிவமைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: வரும் ஜூலை 12-ம் தேதி அன்று முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தின் அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. அதற்கு காரணம் அதன் தனித்துவ வடிவமைப்பு.

கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு விமரிசையாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய வரவேற்பு விழா நிகழ்வு மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் கவுதம் அதானி, ரஜினிகாந்த், தோனி, ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த சூழலில் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ள திருமண விழாவை முன்னிட்டு அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதனை பெற்ற ஒருவர் அதன் வடிவமைப்பை பார்த்து அசந்து போயுள்ளார். அதோடு அதனை சமூக வலைதளத்திலும் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

பெரிய மற்றும் அழகான ஆரஞ்சு நிற பெட்டி ஒன்றுக்குள் வைத்து அந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் மீது பகவான் விஷ்ணு, அவரது நெஞ்சில் லட்சுமி தேவியும் இருக்கிறார். அந்த ஆரஞ்சு நிற பெட்டியை திறந்தால் விஷ்ணு மந்திரம் ஒலிக்கிறது. அதில் அழைப்பிதழ் தங்க நிறத்திலான புத்தகம் போல உள்ளது.

அதனுள் பல்வேறு தெய்வங்களின் படங்கள் உள்ளன. அதனுள் கைப்பட எழுதப்பட்ட திருமண விழா குறிப்பு உள்ளது. மேலும், இதனோடு காஷ்மீர் கைத்தறி பஷ்மினா சால்வையும் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த அழைப்பிதழ் கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. இதனை அந்த வீடியோவை வெளியிட்டுள்ளவர் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT