புதுடெல்லி: தன் குழந்தைகளை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார் அஞ்சு. கடந்த ஜூலை மாதம் தனக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை சந்திக்க சென்றிருந்தார். தொடர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் 34 வயதான அஞ்சு. தங்களுக்குள் காதல் ஏதும் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் இவர்களது திருமணம் நடந்ததாக செய்தி வெளியானது. மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 30 நாட்கள் விசாவுடன் கடந்த ஜூலையில் அவர் சென்றிருந்தார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற கிராமம் தான் நஸ்ருல்லாவின் சொந்த கிராமம். அஞ்சுவும் அங்கு தான் வசித்து வந்தார். இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வாகா எல்லை வழியாக அவர் இந்தியா வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அவர் வந்தார்.
அஞ்சு இந்தியாவில் இருந்தபோது அரவிந்த் என்பவரை மணந்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் பாகிஸ்தானில் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தும் தனது குழந்தைகளை பார்க்க முடியாமல் அவர் தவித்ததாக கடந்த செப்டம்பர் மாதம் நஸ்ருல்லா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அவர் இந்தியா வந்துள்ளார்.