சென்னை: உணவு டெலிவரி பிரதிநிதியாக பணியாற்றி வந்த விக்னேஷ் என்பவர் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணி செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போட்டித் தேர்வு மூலம் இதற்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் பசித்த நேரத்தில் உணவை ருசிக்க உதவுகிறது உணவு டெலிவரி செய்யும் நிறுவன செயலிகள். அதில் ஆர்டர் செய்தால் அந்த உணவை உணவகத்தில் இருந்து அந்நிறுவனத்தின் உணவு டெலிவரி பிரதிநிதிகள், பயனர் இருக்கும் இடத்துக்கே நேரடியாக வந்து டெலிவரி செய்வார்கள். இந்தப் பணியை செய்யும் இளைஞர்களில் ஒருவராக இருந்தவர்தான் விக்னேஷ். தற்போது நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக அவருக்கு வேலை கிடைத்துள்ளது.
இது குறித்த தகவலை சொமேட்டோ நிறுவனம் சமூக வலைதளங்களில் பதிவாக வெளியிட்டிருந்தது. ஆனால், அதில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்பதற்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி தேர்வு என அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இருந்தும் அவரது சாதனை முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தான் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் ஏஓ பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவரே ட்வீட் செய்துள்ளார்.