புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உபர் கால் டாக்சி ஓட்டும் ஓட்டுநர் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பழச்சாறு, பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் மற்றும் வைபஃபை சேவையை வழங்குகிறார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இப்போது பெரும்பாலானவர்கள் தங்கள் போனில் கால் டாக்சி செயலிகள் மூலம் தாங்கள் பயணிக்க விரும்பும் இடங்களுக்கு செல்வது வழக்கம். அதுவும் இதனை நிமிடங்களில் மேற்கொள்ளலாம். இந்த நிலையில் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அவர்களுக்கு பயணத்தை இனிதானதாக மாற்றவும் தனது காரில் தண்ணீர், குளிர் பானங்கள், பழச்சாறு, பிஸ்கட், மிட்டாய் மற்றும் சூயிங்கம் போன்றவற்றை வைத்துள்ளார். இதனை இலவசமாக அவர் வழங்குகிறார்.
அதோடு நாளேடுகள், வார இதழ்கள், இயர் பட், குடை, சானிடைசர், அவசர தேவைக்கான மாத்திரைகள் போன்றவற்றையும் வைத்துள்ளார். அதோடு வாடிக்கையாளர்களுக்கு வைபஃபை சேவையும் தருகிறார். இதனை கோடை காலத்தில் அந்த டாக்சியின் ஓட்டுநர் தொடங்கி உள்ளார். இது அப்படியே தொடர்ந்து வருகிறது.
இதனை அந்த டாக்சியில் பயணித்த வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் அப்துல் காதர் என தெரிகிறது. இதற்காகவே டாக்சியின் முன்பக்க இருக்கையின் பின்பக்கத்தில் அதை நேர்த்தியாக இடம் பெற செய்துள்ளார். கூடவே ஒரு அறிவிப்பு பலகையும் உள்ளது.
“எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம். தாழ்மையான வேண்டுகோள்: நாம் ஒருவருக்கொருவர் கண்ணியமாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு எது உகந்ததோ அதை அடையாளம் கண்டு நாம் உத்வேகம் பெற வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.