பெங்களூரு: கேரள மாநிலத்தை சேர்ந்த கொச்சின் ஷிப் யார்டு கப்பல் கட்டும் நிறுவனத்தின் கிளை கர்நாடகாவில் உள்ள உடுப்பி மல்பே கடற்கரையில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கப்பல் கட்டும் தளம் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பரில் தகவல் வெளியானது. இதுகுறித்து கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம் அளித்த புகாரின்பேரில் உடுப்பி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கொச்சின் ஷிப் யார்டு நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் சிலர் உளவாளிகளாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் செல்போன் எண்கள், சமூக வலைதளங்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த நவம்பரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரோஹித் (23), சான்ட்ரி (26) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், “குஜராத்தை சேர்ந்த ஹிரேந்திர குமார் அவர்களுக்கு சிம் கார்டு வாங்கி போலி வாட்ஸ் அப் கணக்குகளை உருவாக்கி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஹிரேந்திர குமாரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அலிப் இஸ்லாம் (21) என்ற இளைஞரை கேரளாவில் உள்ள இடுக்கியில் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவரை உடுப்பிக்கு அழைத்து வந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அலிப் இஸ்லாம் மேற்கு வங்க முகவரியில் அடையாள அட்டை வைத்துள்ள போதும், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.