மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால்
புதுடெல்லி: மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கான பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. அதன்படி மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும் திரிணமூல் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்வதாக முதல்வர் மம்தா குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, அகர்வாலுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 26-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சிஐஎஸ்எப் விஐபி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய 12 பேர் அகர்வாலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.