மும்பை: நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை "மிகவும் வெட்கக்கேடானது" என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மிகவும் வெட்கக்கேடானது. எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனத்தை இன்று ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. நமது பெண் சக்திக்கு ஆதரவாக நிற்க அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அதில் தோற்றுவிட்டனர்
அவர்களைப் பொறுத்தவரை பெண் அதிகாரம் என்பது வெறும் பேச்சிலும் முழக்கங்களிலும் மட்டுமே உள்ளது. அவர்கள் முன்னேற்றத்தை விட அரசியலையே தேர்ந்தெடுத்தனர். இந்த மசோதாவுக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு, அவர்கள் உண்மையில் யாருக்காகச் செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தியப் பெண்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் இதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பெண் அதிகாரம் என்பது வெறும் பேச்சு அல்ல. அது ஒரு அர்ப்பணிப்பு.
நாளை முதல் நாங்கள் வீதியில் இறங்கிப் போராடுவோம்; நமது பெண் சக்திக்கான ஒவ்வொரு உரிமையையும், நீதியையும், கவுரவத்தையும் உறுதி செய்வோம்” இவ்வாறு பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.