விஜயவாடா: ரீல்ஸ் மோகம் தற்போது பலரை ஆட்டிப் படைக்கிறது. கோயிலுக்கு செல்பவர்களும் ரீல்ஸ் எடுத்து சமூகவலைத் தளங்களில் பரவ செய்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் முன் இதுபோன்று ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது தேவஸ்தானம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதால், அங்கு தற்போது யாரும் கோயில் முன் ரீல்ஸ் எடுப்பதில்லை.
ஆனால், சமீபத்தில் பிரசித்தி பெற்ற விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் முன்பு 7-வது தளத்தில் அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண் 2 நிமிடங்கள் நடனமாடி அந்த ரீல்ஸை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
அது தற்போது வைரல் ஆனதால், இதுதொடர்பாக, கனகதுர்கையம்மன் கோயில் நிர்வாக அதிகாரி வி.கே. சிவா உத்தரவின்பேரில், அதிகாரிகள், விஜயவாடா முதலாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கோயில் சம்பிரதாயங்களை மீறி, கோயில் முன்பு ரீல்ஸ் எடுத்த அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து யார் அந்த பெண்? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.