லக்னோ: உத்தர பிரதேசத்தின் தாபியாபூர், கவுரி கிஷன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் இன்கிலா தேவி. அண்மையில் அவர் அவுரையா பகுதியில் உள்ள சாலையோர கடைக்கு சென்றார். அங்கு பானிபூரியை வாங்கி ருசித்து சாப்பிட்டார். அப்போது பானிபூரி மீதான ஆசையில் ஒரே நேரத்தில் ஏராளமான பானிபூரிகளை அவர் வாயில் திணித்தார். எதிர்பாராதவிதமாக அவரது தாடை உடைந்து, தாங்க முடியாத வலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவரது தாடையை சரி செய்ய மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் பலன் இல்லை.
இதுதொடர்பாக உத்தர பிரதேச மருத்துவர்கள் மனோஜ் குமார், சத்ருகன் சின்ஹா ஆகியோர் கூறியதாவது: பானிபூரி சாப்பிடும் ஆசையில் இன்கிலா தேவி வாயை மிகவும் பெரிதாக திறந்திருக்கிறார். இதில் தாடை விலகிவிட்டது. எங்களது மருத்துவமனையில் தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. எனவே மத்திய பிரதேசத்தில் உள்ள சிச்சோலி மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளோம்.
உணவு சாப்பிடும்போது நிதானமாக, மெதுவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக வாயை பெரிதாக திறந்தால் தாடையில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.