புதுடெல்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலங்களவையில் உள்ள 233 எம்.பி.க்களில் தற்போதுள்ள 229 எம்.பி.க்களில் 73 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர்களில் 36 பேர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு எம்.பி. மீது ஒரு கொலை, 4 கொலை முயற்சி வழக்கு, பெண்கள் மீதான குற்றங்களில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கட்சிவாரியாகப் பார்க்கும்போது, 99 பாஜக எம்.பி.க்களில் 27 பேர் மீதும், 28 காங்கிரஸ் எம்.பி.க்களில் 12 பேர் மீதும், 13 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் 4 பேர் மீதும், 10 ஆம் ஆத்மி எம்.பி.க்களில் 4 பேர் மீதும் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிஆர்எஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா 3 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
மேலும், மாநிலங்களவையில் உள்ள எம்.பி.க்களில் 31 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பண்டி பார்த்தசாரதி ரெட்டி தனக்கு ரூ.5,300 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி. ரஜிந்தர் குப்தாவுக்கு ரூ.5,053 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அல்ல அயோத்தியா ராமிரெட்டிக்கு ரூ.2,577 கோடியும் சொத்துகள் உள்ளன.
குறைந்த அளவு சொத்து வைத்திருப்பவராக ஆம் ஆத்மியின் சாந்த் பல்பீர் சிங் உள்ளார். அவருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது. மணிப்பூர் எம்.பி. மகாராஜா சனஜோபா லெய்ஷெம்பாவுக்கு ரூ.5 லட்சத்துக்கும், திரிணமூல் காங்கிரஸின் பிரகாக் சிக் பராய்க்குக்கு ரூ.9 லட்சத்துக்கும் சொத்து உள்ளது. இவ்வாறு ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.