புதுடெல்லி: “மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. கனவு காணவும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
அவரது இந்த வீடியோவை டேக் செய்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் ஒரு நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது. பெண்கள் விஷயத்தில் ராகுல் காந்தியின் மனநிலையில் ஒரு தெளிவான மாற்றம் தெரிகிறது. இனி, காங்கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
கிரண் ரிஜிஜுவின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி, “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 2023 காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
கேள்வி என்னவென்றால், மூன்று ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது ஏன் அதை தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க விரும்புகிறீர்கள்? 2023-ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துங்கள். எந்த நிபந்தனையும் இன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.